திண்டுக்கல் சீனிவாசனை மட்டும் தனியாக சந்தித்த எடப்பாடி.. 30 நிமிடங்கள்.. என்ன நடந்தது? ரகசியமாம்!
சேலம் : அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் இந்த ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த திண்டுக்கல் சீனிவாசன், ஆலோசனை ரகசியமானது, அதை வெளியே சொல்லக்கூடாது என்றார்.
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன் இருவரும் இன்று 30 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனையை முடித்துக் கொண்டு வெளியே வந்த திண்டுக்கல் சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நல்ல தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்
டெல்லிக்கு பறக்கும் 'இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் 'பளிச்’!
தேர்தல் களம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஈரோட்டில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி தனித்தனியாக தேர்தல் பணிக்குழுவை அமைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரு அணியும் போட்டியிடப் போவதாக அறிவித்து இரட்டை இலை சின்னத்தைப் பெற முயன்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் சீனிவாசனுடன் தனியாக ஆலோசனை
இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டார். கடந்த சில நாட்களாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த ஈபிஎஸ், விரைவில் இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவிக்க உள்ளார். இந்நிலையில் இன்று திண்டுக்கல் சீனிவாசனுடன் தனியாக ஆலோசித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலோசனை - ரகசியம்
இதைத்தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசனிடம் ஈபிஎஸ் உடன் என்ன ஆலோசனை நடத்தினீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர், "எடப்பாடி பழனிசாமியுன் ரகசியமாகப் பேசியதை எப்படி வெளியே சொல்ல முடியும்? ஆலோசனை என்பது ரகசியமானது, அதை வெளியே சொல்லக்கூடாது. வேட்பாளர் குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார். மேலும் இரட்டை இலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்" எனத் தெரிவித்தார்.
தாண்டி போக மாட்டோம்
இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, ஈபிஎஸ் தொடர்ந்த மனு மீது தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மீதான விசாரணை மட்டுமே நடைபெறுமே தவிர அதைத் தாண்டி வேறு எந்த ஒரு விவகாரத்திற்குள்ளும் நாங்கள் செல்ல மாட்டோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.