அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தேமுதிக தனித்துப் போட்டி?. பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாகம்
சேலம்: சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை கொண்டாடும் வகையில் தேமுதிக தொண்டர்கள் எடப்பாடியில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் தொகுதி உடன்பாடு உள்ளிட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு 21 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தேமுதிகவிற்கு10 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதனை ஏற்க மறுத்த தேமுதிக பாமகவிற்கு ஒதுக்கிய அளவிற்கு தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று கோரி வந்தது.
சுதீஷ் அதிருப்தி
இந்நிலையில் 10 தொகுதிகளுக்கு மேல் தர வாய்ப்பே இல்லை என்று அதிமுக கைவிரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், 'நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு' என்பதைக் குறிக்கும் வகையிலான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.
தொண்டர்கள் உற்சாகம்
இதையடுத்து எதிர்பார்த்த எண்ணிக்கையில் சீட் கிடைக்காததால் எதிர்வரும் சட்டசபை தேர்தலில், தேமுதிக தனித்துப் போட்டி உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து, எடப்பாடி பேருந்து நிலையம் முன்பு நகரச் செயலாளர் ஜிவானந்தம் தலைமையில், நேற்று இரவு திரண்ட தேமுதிகவினர், கட்சி தலைமையின் முடிவை வரவேற்று, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தேமுதிக திட்டம்
இதேபோல் தான் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தனித்து களம் இறங்கி தங்கள் பலத்தை கட்சிகளுக்கு நிரூபித்து காட்ட வேண்டும் என்று தேமுதிகவினர் பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். அப்படியான சூழலில்தான் தனித்து போட்டியிட தேமுதிக தலைமை விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிருப்தியில் தேமுதிக
பாமக 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வடமாவட்டங்களில் பெரிய அளவில் வாக்குகளை பெற்று ஆளும் அதிமுக மற்றும் திமுகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் திமுக மற்றும் அதிமுக இரண்டுமே 2019ல் விரும்பின. இதில் அதிமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் 2021 சட்டசபை தேர்தலிலும் அதிமுக பாமகவிற்கு அதிக அளவு மரியாதை கொடுத்தது. வன்னியர் இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் கொடுத்தது. 23 தொகுதியும் ஒதுக்கி கூட்டணியை இறுதி செய்தது. ஆனால் தேமுதிகவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தான் அதிருப்தி அடைந்த தேமுதிகவினர் பலத்தை காட்ட வேண்டும் என தனித்து களம் காண முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வரவில்லை. பிரேமலதா விஜயகாந்த் இதுபற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு உள்ளது.