காது கூசுதே.. “செத்து போயிடுவ!” கோயிலுக்கு சென்ற தலித் இளைஞரை திட்டி தள்ளிய திமுக நிர்வாகி சஸ்பெண்ட்
சேலத்தில் கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக ஒன்றிய செயலாளரை தற்காலிகமாக நீக்கியுள்ளார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்
சேலம்: திருமலைகிரி பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக ஒன்றிய செயலாளரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்து இருக்கிறார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.
சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்து இருக்கிறது. இந்த கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்வதற்கு உயர்சாதியினர் தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தடையை மீறி கோயிலுக்குள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த இளைஞரை சூழ்ந்த ஊர் மக்கள் அவரை கடுமையாக விமர்சித்து மிரட்டல் விடுத்தனர்.
கோயிலுக்குள் வரும் அளவுக்கு துணிச்சலா? தலித் இளைஞரை தீப்பந்தத்தால் தாக்கிய வெறியர்கள்.. பயங்கரம்
தந்தைக்கு மிரட்டல்
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த சேலம் தெற்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம் பட்டியலின இளைஞரின் நெஞ்சை பிடித்து தள்ளினார். அத்துடன் அங்கு நின்றுகொண்டு இருந்த இளைஞரின் தந்தையையும் காது கூசும் அளவுக்கு அசிங்கமான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார்.
காலி பண்ணிருவேன்
அங்கு நின்ற தலித் மக்களை காட்டி, "இவர்கள் எல்லாம் ஆட்கள் இல்லையா? இவர்களுக்கு தெரியாதை நீ செய்கிறாயா? சோறு தண்ணி இல்லாமல் செத்து போயிடுவ. எங்கேயும் போக முடியாது. எத்தனை நாள் நீ என் வீட்டுக்கு வந்த. உன் பையனுக்கு எங்கு போனது புத்தி? எங்க ஊருல பாதி பேரு கோயிலுக்கே வர மாட்டேன் என்கிறான். கோயிலே வேண்டாம் என்கிறான். எல்லாத்தையும் காலி பண்ணிருவேன்." என்றார்.
ஊரில் நடமாட முடியாது
அப்போது ஒருவர் 18 பட்டிக்கும் பொதுவான கோயில் என்று யாரோ சொல்லிக் கொடுத்ததை சொல்கிறான் எனக் கூறினார். இதனை கேட்ட திமுக நிர்வாகி, அந்த இளைஞரை நோக்கி வேகமாக சென்று "உங்க அம்மாவும், அப்பாவும் வந்து கோயில் கட்ட பணம் கொடுத்தார்களா?" என்று மிரட்டல் விடுத்தார். யாரு சொன்னது என்று என்று தெளிவாக சொன்னால் பேத்துபுடுவேன். ஊருல எங்கேயும் நடமாட முடியாது. புள்ளைகளையா வளர்க்கிறாய்?" என்று மிரட்டினார்.
கெட்ட வார்த்தை
இவ்வாறு பேசியதற்கு இடையிடையே அந்த இளைஞரையும் அவரது தந்தையையும் அசிங்கமான வார்த்தைகளை கொண்டு திட்டி மிரட்டல் விடுத்தார் மாணிக்கம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.
கட்சியிலிருந்து இடை நீக்கம்
இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அறநிலையத்துறையின் மாரியம்மன் கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை தகாத முறையில் திட்டிய சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து உள்ளார்.
துரைமுருகன் அறிவிப்பு
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் டி.மாணிக்கம், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.