தயாநிதி மாறன் கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல்.. கண்ணாடியை நொறுக்கி.. சேலத்தில் பரபரப்பு..!
சேலத்தில் தயாநிதி மாறன் கார் கண்ணாடி நொறுக்கப்பட்டது
சேலம்: சேலம் மாவட்டத்தில் திமுக எம்பி தயாநிதிமாறன் வாகனம் மீது பாமகவினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது... சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதில் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசி வருகிறார்.. இன்று காலை செய்தியாளர்களையும் தயாநிதி மாறன் சந்தித்து பேசினார்.. அப்போது அவரிடம் பாமக திமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், பாமக யாருடன் பேரம் பேசுகிறது என்ற தகவல் தனக்கு தெரியாது.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கொடுக்கும் அளவுக்கு திமுகவிடம் பணம் இல்லை, தங்களிடம் கொள்கைதான் இருக்கிறது என்றார். மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியின் போதே அதிமுகவிடம் 400 கோடி ரூபாய் பாமக பெற்றதாக பேசப்பட்டு வந்ததாகவும், இந்த முறையும் பாமக தரப்பில் பேரம் பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதான் பாமக தரப்பினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது.. ஓமலூரை அடுத்த சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, ஓமலூர், பொட்டிபுரம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் பேசிமுடித்துவிட்டு, பூசாரிப்பட்டி நோக்கி தயாநிதிமாறன் செல்லும் பொழுது அங்கு நூற்றுக்கு மேற்பட்ட பாமகவினர் திரண்டு விட்டனர்.
டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி கருப்பு கொடி காட்டினர்.. அதற்குள் இந்த விவகாரம் தெரிந்து திமுகவினரும் அங்கு கூடிவிட்டனர்,.. இதனால் திமுக - பாமக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்தது.. இந்த மோதலில் தயாநிதி மாறனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. காரின் முன் பகுதியில் உள்ள விளக்கும் நொறுங்கியது.
இதையடுத்து அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது.. உடனே இருதரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதற்குள் போலீசார் குவிக்கப்பட்டு விட்டனர்.. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவண்ணம், பாதுகாப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்... அதேபோல, தயாநிதி மாறன் ஓமலூரில் தங்கும் ஹோட்டல் முன்பும் பாமகவினர் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்துவதால், பரபரப்பான சூழல் அங்கு காணப்படுகிறது.