குடிபோதையில் ரகளை.. பெண் போலீஸின் சட்டையை இழுத்து பிடித்து அராஜகம்.. திமுக பிரமுகர் கைது
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட திமுக பிரமுகர் ஒருவர், மக்கள் முன்னிலையில் பெண் காவலரிடம் அத்துமீறி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் சசிகலா. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத்தேர்தலின் போது, கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட, அக்கிசெட்டிப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பிற்பகல் 3 மணியளவில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. காவலர் சசிகலா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்த அரசமரத்தடி நிழலில், சிலர் குடிபோதையில் கூச்சலிட்டுள்ளனர். திடீரென அவர்களுக்குள் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானதால், இத்தகவல் பாதுகாப்பு பணியில் இருந்த சசிகலாவுக்கும், வாக்குச்சாவடி அருகே இருந்த கிராம நிர்வாக அலுவலருக்கும் கூறப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சசிகலா, அக்கும்பலை விரட்டி அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை கும்பலில் இருந்த ஒருவர், காவலர் சசிகலாவை பார்த்து, ஏய் நீ எந்த ஊருக்காரிடி என்று ஒருமையிலும், தகாத வார்த்தைகளாலும் வசைபாட துவங்கியுள்ளார். இதனால் கோபமுற்ற சசிகலா ஒழுங்காக இடத்தை காலி செய்யுமாறு எச்சரித்தார்.
2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே! தேனி தொகுதியில் பெரும் குளறுபடி
அப்போது அந்த வாலிபர் சசிகலாவின் காக்கி சீருடையை முன்பக்கமாகப் பிடித்து இழுத்து மக்கள் முன்னிலையில் அத்துமீறி நடந்தார். கையை எடுக்கச் சொன்ன பிறகும் வாலிபர் சசிகலாவின் சட்டையை இறுக்கமாக பிடித்து தொடர்ந்து ரகளை செய்தார். செய்வதறியாது திகைத்திருந்த சசிகலா ஒரு கட்டத்தில், ஆத்திரம் தாங்காமல் தனது சட்டையை பிடித்திருந்த வாலிபரின் கையை கடித்து விட்டார்.
வலி தாங்காமல் அலறிய வாலிபர் அதன் பின்னரே சசிகலாவின் சட்டையிலிருந்து கையை எடுத்துள்ளார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் சசிகலா புகார் அளித்தார். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் சசிகலாவிடம் போதையில் ரகளை செய்த வாலிபரின் பெயர் விஜய் என்பதும், இவர் திமுக பிரமுகர் என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து விஜய் மீது 294 பி (ஆபாசமாக பேசுதல்), 353 (பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (1) (கொலை மிரட்டல்) மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை அவரை போலீஸார் கைது செய்தனர்.