மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு சரி! அதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்!
சேலம்: மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது என்ற செய்தியை எல்லோரும் அறிந்திருப்போம். ஆனால் அதனால் ஏற்படப் போகும் பயன்கள் என்னென்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
குறுவை சாகுபடி தொடங்கி மின் உற்பத்தி வரை மேட்டூர் அணை திறப்பின் மூலம் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.
அதன் விவரம் வருமாறு;
நாடு விடுதலைக்குப் பின் கோடையில் மேட்டூர் அணை திறப்பு- முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
காவிரி நீர் பிடிப்பு
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. 24.05.2022 நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 117.760 அடியாகவும் நீர் இருப்பு 89.942 டிஎம்சி அடியாகவும் உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே. காவிரி டெல்டாவிவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜுன் 12-க்கு முன்பாகவே, 24.5.2022 முதல் நீரைத் திறந்துவிட்டுள்ளார் முதல்வர்.
5.22 லட்சம் ஏக்கர்
மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டு டெல்டா பாசனப்பகுதிகளில் வழக்கத்தைவிட குறுவை சாகுபடிக்காக சுமார் 5.22 லட்சம் ஏக்கர் பயிரிட்டு அறுவடை செய்ய எதிர்பார்க்கப்படும். எதிர்வரும் சம்பா சாகுபடி பணிகளை முன்னதாக தொடங்கி செயல்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.
எந்தெந்த மாவட்டங்கள்
குறுவை பாசனத்திற்கு நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 93.860 டிஎம்சி தண்ணீரும், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு 30,800 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 5.88 டிஎம்சி தண்ணீரும் மேட்டூர் அணையிலிருந்து தேவைப்படுகிறது.
படிப்படியாக உயர்வு
தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் படிப்படியாக 10,000 கன அடியாக உயர்த்தப்பட்டு, ஜுன் மாதம் இறுதி வரை வழங்கப்படும். ஜுலை மாதத்தில் 10,000 கன அடியிலிருந்து படிப்படியாக 16,000 கன அடியாக உயர்த்தியும், ஆகஸ்ட் மாதத்தில் 18,000 கன அடியாகவும் நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும்.
சம்பா -தாளடி பாசனம்
மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு, செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 12,10,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 205.60 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையிலிருந்து 108.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியும் மீதமுள்ள 97.10 டிஎம்சி தண்ணீர் பருவமழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும்.
18 மாவட்டங்கள்
மேட்டூர் அணையின் கீழ்காவிரி ஆற்றில் இருந்து சுமார் 155 குடிநீர் திட்டங்களின் மூலம் தினசரி 1700-க்கும் மேற்பட்ட மில்லியன் லிட்டர் தண்ணீர் 18 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆண்டு முழுவதும் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
மின் உற்பத்தி
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கும் தண்ணீர் திறந்து விடப்படும் பொழுது அணை மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும் மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் கீழ் பகுதியில் 7 கதவணை நீர் மின் நிலையங்கள் மூலம் 7 x 30 மெகாவாட், என மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.