மிசா சர்ச்சை முட்டாள்தனமானது.. உங்களுக்கு என்ன தகுதி உள்ளது?.. சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் தந்த பதிலடி!
சேலம்: மிசா சர்ச்சை முட்டாள்தனமானது, திமுகவின் தியாகத்தை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலினும் இதில் கைதானார். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்தார். மாஃபா பாண்டியராஜன் தனது பேச்சில், ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை.
மிசா இருந்த நேரத்தில் கைதானார். ஆனால் அவரை மிசாவிற்காக கைது செய்யவில்லை. அவர் மோசமான வழக்கில் சிறைக்கு சென்று இருந்தார் என்று குறிப்பிட்டார்.
சர்ச்சை என்ன
மாஃபா பாண்டியராஜன் அளித்த இந்த பேட்டி திமுகவினர் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சென்னையில் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுக கட்சியினர் போராட்டம் நடத்தி உள்ளனர். இது தமிழக அரசியலில் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கியது.
பதில் சொன்னார்
இந்த நிலையில் மிசா சர்ச்சை குறித்து ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். சேலத்தில் "திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்" என்ற முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார். அதில், மிசா சர்ச்சை முட்டாள்தனமானது.
ஏன் பிரச்சனை
நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது. அதை திசை திருப்ப ஏன் மிசா பிரச்சனையை பேசுகிறீர்கள். கொலை கொள்ளை செய்துவிட்டு நான் ஜெயிலுக்கு போகவில்லை. ஸ்டாலினை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை. சிறைக்கு பயந்தவன் நான் இல்லை.
சட்டம் என்ன ?
நான் மிசா சட்டத்தில் சிறையில் இருந்தேனா, இல்லையா என்பது மிக முக்கியமான விவாதமா?. நான் திமுக கட்சியா என்று கேட்பது எவ்வளவு முட்டாள்தனமான கேள்வியோ அப்படி முட்டாள்தனமது நான் மிசாவில் கைதானதை கேள்வி கேட்பது.
என்ன விஷமிகள் சொன்னார்கள்
மிசாவில் நான் சிறையில் இருந்தது தொடர்பாக கடந்த சில நாட்களாக சில விஷமிகள் பொய்யான சர்ச்சைகளை பரப்புகிறார்கள். மக்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். திமுகவில் உள்ளவர்கள் கழகத்திற்காக குடும்பம் குடும்பமாக உழைத்தார்கள்.
தியாகம் செய்தனர்
குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் திமுக. எங்களை குடும்ப கட்சி என்று பொய்யான வதந்தியை பரப்புகிறார்கள். நெருக்கடி நிலையை எதிர்த்த ஒரே கட்சி திமுக தான். ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று கருணாநிதி நெருக்கடி நிலையை எதிர்த்தார், என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி உள்ளார்.