காவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை!
காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
சேலம்: காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகமாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகாவில் அதிக அளவு மழை பெய்ததால் நீர் வரத்து காவிரியில் அதிகம் ஆனது.
எவ்வளவு வரத்து
அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஆனால், அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வந்தது. இந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
எத்தனை முறை
2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் 86 ஆண்டுகளில் 44வது முறையாக நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. இதனால் காவிரியில் இருந்து பெரிய அளவில் தண்ணீர் ஓடுகிறது.
எங்கு எல்லாம் வெள்ளம்
முக்கியமாக மேட்டூரை அடுத்து இருக்கும் பகுதியில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள கிராமங்கள், ஓசூரை அடுத்து உள்ள கிராமங்கள், ஒகேனக்கலை சுற்றி இருக்கும் வீடுகளுக்கு அருகே காவிரியில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது.
மக்களுக்கு எச்சரிக்கை
இதனால் தற்போது கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி காவிரியில் அதிக அளவு வெள்ளம் வருகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று 12 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.