கொரோனா இறப்பை அரசு மறைக்கவில்லை... தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் இல்லை -முதலமைச்சர் திட்டவட்டம்
சேலம்: கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு மறைக்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை இன்று திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
மேலும், கொரோனா தமிழகத்தில் சமூக பரவலாக இன்னும் மாறவில்லை என அவர் உறுதிப்படக் கூறினார்.
பிற நாடுகளுக்கு கொரோனா மட்டும்தான் பிரச்சினை.. நமக்கு வேறு நிறைய சவால் உள்ளது.. மோடி பேச்சு
ஈரடுக்கு மேம்பாலம்
சேலத்தின் புதிய அடையாளமாக ரூ.441 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதற்காக நேற்று மாலையே சென்னையில் இருந்து புறப்பட்டு சேலம் சென்றுவிட்டார். இன்று திறந்து வைக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்திற்கு மறைந்த ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேபோல் சேலம் மாநகரின் வணிகப்பகுதியான லீ பஜாரில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதன் மதிப்பு ரூ.46.35 கோடியாகும்.
திடமாக மறுப்பு
ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த பின்னர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது கொரோனா தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். தமிழகத்தில் கொரோனா இறப்பை அரசு மறைக்கவில்லை என்றும், கொரோனா உயிரிழப்பு விவரத்தை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை எனக் கூறினார். அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை அரசு மறைப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் அதனை திடமாக மறுத்திருக்கிறார் முதல்வர்.
உயிரிழப்பு குறைவு
இதேபோல் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக இன்னும் மாறவில்லை என்றும், சென்னையில் நெருக்கடியான பகுதிகளில் மக்கள் நெரிசலாக வசிப்பதால் அங்கு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவிலேயே கொரோனா உயிரிழப்பு விகிதம் தமிழகத்தில் தான் குறைவு என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். தற்போதைய சூழலில் கொரோனாவுக்கு இருக்கும் ஒரே மருந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அரசின் வழிமுறைகளை பின்பற்றுவது தான் என தெரிவித்தார்.
ஆங்காங்கு ''செக்''
தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறாமல் தடுப்பதற்காக தான் ஆங்காங்கு ''செக்'' வைத்துள்ளதாக கூறினார். இதனிடையே செய்தியாளர் ஒருவர், ஊரடங்கு தளர்வு குறித்து கேட்டபோது, ஊரடங்கில் தான் போதுமான வரை தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதே, இன்னும் என்ன தளர்வு வேண்டும் என வினவினார். வழிபாட்டு தலங்களை திறந்த மாநிலங்கள் இப்போது அதனை மூடும் திட்டத்தில் இருப்பதாக கூறினார். சேலம் சொந்த ஊர் என்பதால் அங்கு எப்போது செய்தியாளர்களை சந்தித்தாலும் வழக்கமாக உற்சாகமாக முதல்வர் பேசுவார் முதல்வர். அந்த வகையில் இன்றும் அதே உற்சாகத்துடன் செய்தியாளர்களை சந்தித்தார்.