ஸ்டாலினைப் புகழும் எடப்பாடி தொகுதி மக்கள்! – என்ன நடந்தது தெரியுமா?
சேலம்: 300 ஆண்டுகள் பழமையான மலைக்கிராமத்திற்கு 3 நாளில் வாசலை வசதி. 45 வருஷமாகக் கூரைக் கொட்டகையில் வறுமையில் வாடிவந்த ஆதரவற்ற பெண்மணிக்கு ஓர் அழகான அரசு வீடு. வார விடுமுறை நாள்களில் மகிழ்ச்சியாக ஆட மைதான வசதி இல்லாமல் தவித்த இளைஞர்களுக்குத் தரமான வசதிகளுடன் ஒரு விளையாட மைதானம். இப்படி பல ஆச்சரியமான அனுபவங்களைப் பெற்று இருக்கிறார்கள் எடப்பாடி சுற்று வட்டார மக்கள்.
எதிர்க்கட்சி தலைவரின் தொகுதிதானே என எட்டிப்பார்க்காமல் புறக்கணிக்கும் வழக்கமான அரசியல்வாதிகளிடம் இருந்து எட்டி நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அடுத்தடுத்த அன்பான பரிசுகளைத் தந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். சென்னையைத் தாண்டி எந்தச் சாதனையும் தலைப்புச் செய்தி ஆவதில்லை. ஆகவே தேடிப் பிடித்து தரமான ஒரு செய்தியை முன்வைக்கிறது இந்தக் கட்டுரை.
கனடா வர முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.. மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்!
7கோடியில் சாலை, 10 லட்சத்தில் சுவையான குடிநீர்:
சேலம் மாவட்டத்தில் உள்ளது ஆலடிப்பட்டி ஊராட்சி. அதன் அருகில்தான் வாழுத்து கிராமம். இந்தக் கிராமத்திலிருந்து பொலப்பாடிக்குப் போகச் சரியான சாலை வசதி இல்லை. கரடுமுரடான மண் சாலையில் தான் மக்கள் பல ஆண்டுகளாகப் பயணித்து வருகின்றன. குறைந்தது 7 கி.மீ தூரத்தை மக்கள் நடந்தே கடந்து செல்லவேண்டிய அவலநிலை.
மலைவாழ் மக்கள் என்பதால் இந்தப் பகுதிக்குச் சாலை மட்டும் இல்லை. வெளிச்சம் கூட வரவில்லை. ஆம்! மின்சார வசதி கூட இல்லாமல் இத்தனைக் காலம் இம்மக்கள் கும்மி இருட்டி வாழவேண்டிய அவலம்.
"பக்கத்து ஊர் சந்தைக்கு மக்கள் நடந்து போக வேண்டும். வாரம் ஒருமுறை போய் தேவையான மளிகை சாமான்களை வாங்கி வருவார்கள். ஊரில் மருத்துவமனை இல்லை. ஏதாவது சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்றால் நடந்தே போகவேண்டும். அதுவும் கர்ப்பிணிகள் நிலைமையைச் சொல்லவே வேண்டாம். வலி வந்தால் டோலி கட்டித் தூக்கிப் போவோம். இரவுநேரம் என்றால் மின்சாரம் கூட இல்லாததால் தவித்து போவோம்" என்கிறார்கள் இந்த ஊர் பெண்மணிகள்.
"ஒருவசதி இல்லை இந்த ஊரில். குழந்தைகள் பள்ளிக்குப் படிக்க நடந்தேதான் போக வேண்டும். இவ்வளவு கஷ்டமும் இப்போ ஒரே நேரத்தில் மாறி இருக்கிறது. சாலை வசதி வந்தாச்சு. தண்ணீர் வசதி வந்தாச்சு. மின்சாரம் கூட வந்தாச்சு" என்கிறார் ஒரு மூதாட்டி. அத்தனைக்கும் அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்கிறார்.
"7கோடியில் சாலை வசதி போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். மலைக்கிராமம் என்பதால் 3 கோடியில் சாலைக்கு தடுப்புச் சுவர் போட்டுள்ளார்கள். 10 லட்சம் செலவில் இரண்டு போர்வெல் போட்டு ஊர் முழுக்க குடிநீர் விநியோகம் நடக்கிறது. மொத்தம் 9 கிராமங்கள் உள்ளன. 5 ஆயிரம் பேர்களுக்கு மேல் வசிக்கிறார்கள். இந்த வசதிகள் எங்கள் கிராமத்திற்குள் வர இத்தனை வருஷங்கள் ஆகிவிட்டது" என்கிறார் ஊராட்சி செயலாளர் ரமேஷ் குமார்
கூரைக் கொட்டகை மாளிகையான கதை:
இது ஒட்டு மொத்தமாக ஒன்பது கிராமங்களில் நடந்த மாற்றம். ஒரே ஒரு பெண்மணி வீட்டில் கூட இதே மாற்றம் நடந்திருக்கிறது.
"அய்யா சாமீ! எனக்கு யாருமே இல்லைங்க. ஒத்த மனுஷியா 45 வருஷமா இதே ஊரில்தான் வாழ்ந்து வருகிறேன். யாரும் உதவல. ஸ்டாலின் அய்யாவுக்கு மனு எழுதினேன். இப்போ வீடு கட்டிக் கொடுத்திருக்காங்க. முதல்வருக்கு ரொம்ப நன்றி" எனக் கண்ணீர் மல்கச் சொல்கிறார் வாழப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட குறிச்சி கிராமத்தில் வசிக்கும் சாந்தி.
இவர் இதற்கு முன் வாழ்ந்து வந்தது ஒரு கூரைக் கொட்டகை. ஒரு லேசான தூரலுக்குக் கூட தாங்காத கொட்டகை. அதில்தான் தன் இத்தனை வருட வாழ்நாளைக் கழித்திருக்கிறார். இன்று மண் வீடு என்பது மாறி மாளிகை அளவுக்கு ஒரு தரமான சிமெண்ட் வீட்டில் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார் இந்தப் பெண்மணி.
இந்த ஊரில் இவருக்கு மட்டும் இல்லை. மேலும் பலருக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
முதலில் ஒரு கிராமத்திற்கு வந்த வசந்த காலத்தைப் பார்த்தோம். அடுத்து மகிழ்ச்சி வாழ்க்கைக்குத் திரும்பிய ஒரு தனி மனுஷியின் கதையைக் கேட்டோம். அடுத்து நூறு இளைஞர்களின் இதயத்தில் ஏற்பட்ட இன்பத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
15 நாள்களில் ஒரு விளையாட்டு மைதானம்:
இதுவும் அதே சேலம் பக்கம் உள்ள எடப்பாடி ஏரியா செய்திதான். இந்தப் பகுதிக்குள் உள்ள கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சமுத்திரம் ஊராட்சி இளைஞர்களின் வெகு நாள் கனவு தங்கள் கிராமத்திற்கு என்று தனியே ஒரு விளையாட்டு மைதானம் தேவை என்பது.
வார விடுமுறை நாள்களில் ஆடி மகிழ ஒரு அழகான களம் இல்லை என்பது நெடுநாள் வருத்தமாகவே இருந்துள்ளது. ஒரு மனுவை எழுதி ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளார்கள். அடுத்த நாள் ஆட்சியர் வந்து கிராமத்தில் நின்றிருக்கிறார்.
கிராமத்தில் தரிசாகக் கிடந்த 2 ஏக்கர் நிலத்தை மைதானமாக மாற்றி தந்தால் எங்கள் பகுதியிலிருந்து பல நடராஜன்களைப் பார்க்கலாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். உடனே கோரிக்கை ஏற்கப்பட்டு மைதான வேலைகள் தொடங்கி உள்ளன.
"மொத்தம் 15 நாள்கள்தான். இரவு பகலாக வேலைகள் நடந்தன. மைதானம் வந்துவிட்டது" என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த வடிவுக்கரசி.
உருவானது விளையாட்டு மைதானம்:
"எங்கள் ஊரில் ஆட மைதானம் இல்லை. வெளி ஊருக்குத்தான் போவோம். அங்கே ஆடும் போது சின்னசின்ன சண்டைகள் வரும். அதற்குப் பயந்தே ஆடாமல் வந்துவிடுவோம். இன்றைக்கு எங்கள் ஊருக்கு என்றே தனி மைதானம் வந்திருக்கிறது. 120 இளைஞர்கள் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள். மூன்று டீம் இருக்கிறது. கிரிக்கெட் என்றால் உயிர். அந்த ஆசையை ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அவருக்கு எங்கள் ஊர் மக்கள் சார்பில் நன்றி" என்கிறார் இளைஞர் தர்மராஜ். இதே குரலை எதிரொலிக்கிறார் முருகன்.
"இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் கிரிக்கெட் ஆட்ட நாயகன் நடராஜன். அதேபோல தங்கவேலு மாரியப்பன். இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பல இளைஞர்கள் வருங்காலத்தில் வருவார்கள். அதற்கு இந்த விளையாட்டு மைதானம் உதவியாக இருக்கும்.
மொத்தம் 385 பஞ்சாயத்துகளில் 110 விளையாட்டு மைதானங்களை விரைவில் அமைக்க உள்ளோம். அதற்கான முன்னோட்டம்தான் கொங்கணாபுரம் மைதானம்" என்கிறார் சி.பாலச்சந்தர் இ.ஆ.ப.
மாற்றங்கள் எவையும் தானாக நடப்பதில்லை. அதைத் திட்டமிட, செயல்பட ஒரு தலைமை வேண்டும். அந்தத் தலைமை தற்போது தமிழ்நாட்டிற்கு ஸ்டாலின் மூலம் கிடைத்திருக்கிறது என்கிறார்கள் இந்தச் சுற்று வட்டார இளைஞர்கள்.