தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்... கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் -முதலமைச்சர்
சேலம்: தனியார் பள்ளிகளில் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை பாயும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறந்து வைத்த அவர் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
மேலும், தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்த முடியாது என்றும் இது ஜனநாயக நாடும் எனவும் அவர் உறுதிப்படக் கூறினார்.
தமிழக சுகாதாரதுறை செயலாளர் பீலா ராஜேஷ் டிரான்ஸ்பர்.. மீண்டும் வந்தார் 'அதிரடி நாயகன்' ராதாகிருஷ்ணன்
அதிகரிக்கும் புகார்கள்
கொரோனா கொடூரத்துக்கு மத்தியிலும் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை, கட்டணம் வசூல், ஆன்லைன் வகுப்புகள் என அதகளம் செய்து வருகின்றன. இதனை வெளியில் சொன்னால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்குமோ என அஞ்சி லட்சக்கணக்கான பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதற்கேற்ப தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
நடவடிக்கை பாயும்
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்து பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தனியார் பள்ளிகள் கட்டண வசூல் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூல் தொடர்பாக அரசுக்கு புகார் வந்தால் கடும் நடவடிக்கை பாயும், பெற்றோர் தைரியமாக புகார் அளிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
ஜனநாயக நாடு
இதேபோல் தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்துமா என மற்றொரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தனியார் மருத்துவமனைகளை அரசு கையக்கப்படுத்த முடியாது; இது ஜனநாயக நாடு எனக் கூறினார். மேலும், கொரோனா முழுமையாக கட்டுக்குள் வரும் வரை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை முதல்வர் உறுதிப்படுத்தினார்.
முதல்வரின் ஆறுதல்
தனியார் பள்ளிகள் கட்டணம் விவகாரத்தில் முதலமைச்சர் அளித்துள்ள உறுதியும், எச்சரிக்கையும் லட்சக்கணக்கான பெற்றோர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இதனிடையே முதலமைச்சரின் இந்த அறிவிப்பை மாவட்ட அளவிலான கல்வித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தங்கள் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.