முதல்வரானாலும் தாய்க்கு மகன்தானே.. தாய் இறுதிச் சடங்கில் தளர்ந்து போன எடப்பாடி பழனிச்சாமி.. சோகம்
சேலம்: தாயாரின் இறுதி ஊர்வலத்தில், சோகமே உருவாக நடை தளர்ந்து காணப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Recommended Video
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டரின் மனைவி தவுசாயம்மாள் (93).
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரான இவர், உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை மரணமடைந்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார்
அரசு நிகழ்ச்சிகள் ரத்து
இந்த தகவலை அறிந்ததும், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்த எடப்பாடி பழனிச்சாமி சொந்த ஊர் திரும்பினார். அங்கு தாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கே குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், எடப்பாடி பழனிச்சாமியின் நண்பர்கள் என பலரும் சென்று அஞ்சலி செலுத்தினர்.
நடந்து சென்ற எடப்பாடியார்
இதையடுத்து, தவுசாயம்மாளின் உடல், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், வைக்கப்பட்டு, ஊர்வலமாக இடுகாடு நோக்கி சென்றது. அப்போது வாகனத்திற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமியும், முகக் கவசம் அணிந்தபடி நடந்து சென்றார். அங்கே வருகை தந்தவர்களுக்கு கைகளால் வணக்கம் சொல்லியபடியே நடந்து கொண்டிருந்தார். அவரது நடை தளர்ந்து இருந்தது. முகத்தில் சோகம் அப்பியிருந்தது.
மிகுந்த சோகம்
எத்தனை வயதானாலும் தாயை இழந்த துக்கம் எடப்பாடி பழனிச்சாமியின் முகத்தில் தெரிந்தது. அவருக்கு, உடனிருந்தவர்கள் ஆறுதல் கூறினர். இடுகாடுக்கு தவுசாயம்மாள் உடல் சென்று சேர்ந்ததும், சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இரங்கல்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியை போனில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சடங்கு
இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருப்பணன், சேலம் மாவட்ட ஆட்சியர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மேற்கு மண்டல ஐஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.