இங்கே எல்லோரும் தலைவர்கள்.. ராஜன் செல்லப்பாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி
Recommended Video
சேலம்: அதிமுகவில் தொண்டர்கள்தான் தலைவர்கள் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து, ராஜன் செல்லப்பாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று, பகல் 12.15 மணியளவில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள ஆற்றுப் பாலத்தை, சேலம் மாவட்டத்திலுள்ள, கவுண்டம்பட்டி மக்களுக்கு உதவிகரமாக கட்டி கொடுத்துள்ளோம்.
இதேபோல அரசு ஆதிதிராவிடர் நல விடுதி, கருவூல கட்டிடம் திறப்பு உள்ளிட்ட 17 நலத்திட்ட பணிகளை இன்று துவங்கி வைத்துள்ளேன்.
நாங்கள் கட்டி உள்ள பாலங்கள் அனைத்துமே பொதுமக்களுக்கு பலன் கொடுக்கக் கூடியவை தான். ஆனால், வேண்டும் என்று திமுகவினர் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்று குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஓபிஎஸ் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் பரபரத்த ராஜன் செல்லப்பா.. ஓபிஎஸ் சொன்ன பதில் இதுதான்!
சேலம் பாலம்
சேலத்தில் தேவையில்லாத இடத்தில் பாலம் கட்டி உள்ளதாக திமுக எம்பி பார்த்திபன், தெரிவித்துள்ளார். ஆனால் சேலத்தில் உள்ள ஊடக நண்பர்களுக்கு தெரியும். அங்கு எந்த அளவுக்கு போக்குவரத்து பிரச்சினை இருந்தது. இப்போது எப்படி குறைந்துள்ளது என்பது. மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தான் சேலம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில், பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
அழைப்பிதழ்
சேலம் லோக்சபா தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்த்திபன் இன்னும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதற்குள்ளாக, அரசு விழாவிற்கு, எங்களுக்கு அழைப்பிதழ் தரவில்லை என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். இந்த விழாவுக்கு அழைப்பிதழை அச்சடிக்கவில்லை என்பதை கூட அவர் மக்களிடம் மறைத்து பொய் சொல்கிறார். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
பேட்டி பார்க்கவில்லை
இதனிடையே, மதுரையில், அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இன்று அளித்த பேட்டியின்போது, அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும் என கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு முதல்வர் அளித்த பதில்: நான் ராஜன் செல்லப்பா பேட்டியை இன்னும் பார்க்கவில்லை. அவரது பேட்டியை பார்த்த பிறகுதான் நான் கருத்து சொல்ல முடியும். இதெல்லாம் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை. எனவே மூல காரணத்தை அறிந்த பிறகுதான் என்னால் பதில் சொல்ல முடியும்.
கோஷ்டி பூசல் இல்லை
அதிமுகவில் கோஷ்டி பூசல் கிடையாது. அப்படி, இருந்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து எப்படி தொடர்ச்சியாக அதிமுகவில் வந்து இணைவார்கள்? இது போன்ற செய்திகளை, எதிர்க்கட்சிகள், ஊடகத்தினர் பரபரப்புக்காக கிளப்பப்படும் வதந்திகள்தான். நாங்கள் இடைத்தேர்தலில் அதிக சட்டசபை உறுப்பினர்களை வென்றோம். அதற்கு காரணம் எங்களின் ஒற்றுமைதான். அதிமுக வலிமை மிக்க இயக்கமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
ஜெ. நினைவிடம்
ரவீந்திரநாத் மட்டும் கிடையாது. பல சட்டசபை உறுப்பினர்களும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். அங்கு ஏற்கனவே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வேலைகள் முடிந்த பிறகு மற்றவர்களும் சென்று அஞ்சலி செலுத்துவார்கள். ஜெ. நினைவிட கட்டுமான பணிகள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக தான் அதிகம் பேர் அங்கு செல்லவில்லை.
தொண்டர்களே தலைவர்கள்
அதிமுகவில், இரட்டை தலைமை, ஒற்றை தலைமை என்பதெல்லாம் பிரச்சினை கிடையாது. தொண்டர்கள் ஆளுகின்ற இயக்கம்தான் அதிமுக. இங்கு எல்லோருமே தலைவர்கள் தான். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.