கமிஷன் அதிகம் கேட்கிறார்கள்! டெண்டர் எடுக்க ஒப்பந்ததாரர்கள் தயாராக இல்லை! எடப்பாடி பழனிசாமி புகார்!
சேலம்: தமிழகத்தில் கிராமம் தொடங்கி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி என அனைத்து நிலைகளிலும் கமிஷன் அதிகம் கேட்கப்படுவதால் டெண்டர் எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
கோவையில் ரூ.48 கோடி மதிப்பில் 133 வேலைகளுக்கு 11 முறை டெண்டர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசுக்கு எதிராக போராடி திமுக என்ன சாதித்துவிட்டது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் இணைந்தார் அய்யாதுரை பாண்டியன்! ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த எடப்பாடி பழனிசாமி!
சேலத்தில் எடப்பாடி
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை என எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்கு போனார். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, என மக்களை பற்றி எதுவும் கவலைப்படாமல் திமுக அரசு உயர்த்தி வருவதாகவும் இந்தச் சுமையை தாங்க கூடிய சக்தி மக்களுக்கு கிடையாது எனவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து வருவதாக கூறினார்.
அதிக கமிஷன்
தமிழகத்தில் கிராமம் தொடங்கி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி என அனைத்து நிலைகளிலும் கமிஷன் அதிகம் கேட்கப்படுவதால் டெண்டர் எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை என்ற பரபரப்பு புகாரை முன்வைத்த அவர், கோவையில் மட்டும் ரூ.48 கோடி மதிப்பில் 133 வேலைகளுக்கு 11 முறை டெண்டர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மிகவும் மெத்தனமான ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர் சடினார்.
மக்கள் கொதிப்பு
சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி இதனால் மக்கள் கொதித்து போய் உள்ளதாக கூறினார். மேலும், மத்திய அரசுக்கு எதிராக போராடி திமுக என்ன சாதித்துவிட்டது என்ற கேள்வியை முன் வைத்த அவர், நீட் தேர்வை திமுக அரசால் ரத்து செய்ய வைக்க முடிந்ததா என செய்தியாளர்களை நோக்கி எதிர் கேள்வி எழுப்பினார். திமுக எம்.பி.க்கள் இந்த விவகாரத்திற்காக என்ன செய்தார்கள் எனக் கேட்டார்.
அதிமுகவில் பிரச்சனையில்லை
காவிரி நதிநீர் பிரச்சனையின் போது 22 நாட்கள் அதிமுக எம்.பி.க்கள் அவையை முடக்கியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுகவை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எழுச்சியுடன் பொதுக்கூட்டங்கள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.