ஒரே அறிவிப்பில் சிக்ஸர் அடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி...!
சேலம்: காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலம் எதிர்க்கட்சிகளை கிளீன் போல்டு செய்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அதனை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் முதல்வர்.தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த வேதாந்தா, ஒ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதனை எதிர்த்து எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு அனைத்து தரப்பையும் மகிழ்ச்சி வெள்ளத்த்ல் மிதக்கவிட்டுள்ளார் முதல்வர்.
நெற்களஞ்சியமான டெல்டாவில் விவசாய நிலங்கள் பாழ்படும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். விவசாயிகளுக்கு ஆதரவாக அண்மையில் கூட திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தனிப்பட்ட முறையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் முதல்வரிடம் எடுத்துக்கூறி வலியுறுத்தினர். இதையடுத்து இது தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் வைத்து சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகிறது.. வரலாற்று உத்தரவு.. வெளியிட்டார் முதல்வர்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி தராது என முதல்வர் அறிவித்ததை வரவேற்று டெல்டா மாவட்ட மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மணடத்தில் அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்ற நிலையில், டெல்டா மண்டலத்தில் வாஷ் அவுட் ஆகியிருந்தது. மேலும், வரும் நகர்ப்புறம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதை உணர்ந்ததால் ஹைட்ரோ கார்பன் திட்டம் விவகாரத்தில் முதல்வர் துணிச்சலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.