8 வழிச்சாலைக்கு நிலம் தந்துவிட்டதாக முதல்வர் எடப்பாடியார் சொல்வதா? - விவசாயிகள் போராட்டம்
சேலம் சென்னை எட்டு வழிச் சாலைக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து விவசாயிகள் இன்று தடையை மீறி சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சேலம்: எட்டுவழி சாலை திட்டத்திற்காக 92 சதவிகித விவசாயிகள் விருப்பப்பட்டு நிலங்களை வழங்குவதாக முதல்வர் தவறான தகவலை தெரிவித்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இரண்டு சதவிகித விவசாயிகள் கூட நிலங்களை தர சம்மதிக்காத நிலையில் முதல்வர் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார் என்று கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
சேலம் சென்னை இடையே எட்டு வழிச் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டன. சுமார் 10,000 கோடி செலவில் அமைக்கப்படும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
பாதிப்பு என்னென்ன
எட்டுவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தினால், மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மரங்கள் வெட்டப்படும். மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகள், போர்வெல்கள் அழிக்கப்படும். நூற்றுக்கணக்கான நீர் வழிப்பாதைகள், நீரோடைகள், குளங்கள், குட்டைகள் மூடப்படப்படும். பல ஆயிரம் டன் உணவுப்பொருள் உற்பத்தி பாதிக்கப்படும் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும். இத்திட்டத்தால் இயற்கை வளங்களும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்றும் புகார் கூறும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சேலம் 8வழிச்சாலைக்கு தடை
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி சென்னை-சேலம் 8வழி சாலை திட்டத்துக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசும் இந்திய நெடுஞ்சாலை துறையும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
உச்சநீதிமன்றம் ஆணை
உச்சநீதிமன்றத்தில் முதலில் இந்த வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதி அருண் மிஸ்ரா ஓய்வு பெற்ற நிலையில் நீதிபதிகள் கான்வில்கர், பிஆர் கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்து அக்டோபர் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடையில்லை என்றும் ஏற்கெனவே நடைபெற்ற நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கை மட்டுமே செல்லாது.
புதிய அரசாணை
இது தொடர்பாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு திட்டத்தை செயல்படுத்தலாம் என்று உத்தரவிட்டது. சென்னை 8 வழி கட்டணச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை மக்களுக்கே திருப்பி தரவேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற திருத்தம் செல்லாது; அனுமதி தேவை, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். புதிய அரசாணை பிறப்பித்து மீண்டும் திட்டத்தை தொடரலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
நீண்ட காலத்திட்டம்
இதனிடையே எட்டுவழிச்சாலை தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவாரூர் வந்த முதல்வர் பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த அவர், வெளிநாடுகளில் குறைந்தபட்சமே 8 வழிச்சாலைதான் உள்ளது. நாடு தொழில் வளர்ச்சிக்கு சாலை அவசியம் என்று கூறினார். 8 வழிச்சாலை நீண்ட கால திட்டம், இப்போது தொடங்கினால் கூட முடிய 6 ஆண்டுகளாகும். 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், நிலம் கையகப்படுத்தியது மட்டுமே மாநில அரசு என்றும் கூறினார் முதல்வர் பழனிச்சாமி.
92 சதவிகித விவசாயிகள் உறுதி
அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு 92 சதவீத விவசாயிகள் நிலம் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு சம்மதம் இல்லை
சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை அண்மையில் உச்சநீதிமன்ற தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் 92 சதவிகித விவசாயிகள் விருப்பப்பட்டு எட்டு வழிச்சாலைக்கான நிலங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார். அது தவறான தகவல். இரண்டு சதவீத விவசாயிகள் கூட நிலங்களை தர சம்மதிக்காத நிலையில் முதல்வர் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார். 92 சதவிகித விவசாயிகள் என குறிப்பிடும் முதல்வர், அவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.