பந்தலில் அமர்ந்து ஆறுதல் கூற வருபவர்களை சந்திக்கும் முதல்வர்... மதியம் மட்டும் சிறிது நேரம் ஓய்வு..!
சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தாயார் மறைவு காரணமாக கடந்த 3 நாட்களாக சேலம் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்தில் தங்கியிருக்கிருக்கிறார்.
அங்கு அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தொழிலதிபர்கள், மாற்றுக்கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான கட்சியினர் கடந்து 3 நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதலும், ஆதரவும் தெரிவிக்க வருவதால் அவரது குடும்பத்தினர் நெகிழ்ந்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் 10 பொய்களும்... கோவை முப்பெரும் விழாவில் பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்
தாயார் மறைவு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் கடந்த திங்கள்கிழமை இரவு காலமானார். இதையடுத்து தென் மாவட்டங்களில் செவ்வாய்கிழமை அன்று ஆய்வுப் பணிக்கு திட்டமிட்டிருந்த முதல்வர் அதனை ரத்து செய்துவிட்டு இரவோடு இரவாக பயணித்து சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு சென்றார். கடந்த 3 நாட்களாக அவர் அங்கு தான் தங்கியிருக்கிறார்.
துக்கம் விசாரிப்பு
சிலுவம்பாளையம் இல்லத்தின் முன் பெரியளவில் பந்தல் அமைக்கப்பட்டு அதில் முதல்வரின் உறவினர்கள், ஊர்க்காரர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்து துக்கம் விசாரிக்க வருபவர்களை சந்திக்கிறார். காலை முதல் மதியம் வரை பந்தலில் அமர்ந்திருக்கும் அவர் பிற்பகல் மட்டும் இரண்டு மணி நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மீண்டும் மாலை 4 மணி முதல் தன்னை சந்தித்து ஆறுதல் கூற வருபவர்களை சந்தித்து வருகிறார்.
மாற்றுக்கட்சி பிரமுகர்கள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பல முக்கிய தொழிலதிபர்கள் ஆறுதல் கூறிய நிலையில் சென்னை சில்க்ஸ் அதிபர் உட்பட சிலர் மட்டும் நேரடியாகவே சிலுவம்பாளையம் சென்று துக்கம் விசாரித்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் வீரபாண்டி ராஜா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், என மாற்றுக்கட்சி பிரமுகர்கள் முதல்வரை அவரது இல்லம் தேடிச்சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.
அதிமுகவினர்
இதேபோல் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் என தென் கோடியில் தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வரையில் இருந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கடந்த 3 நாட்களாக முதலமைச்சரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சிலுவம்பாளையத்திற்கு வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் முதல்வருக்கான ஆதரவு வட்டம் மிக வலிமையாக இருப்பது உணர முடிகிறது. இதனிடையே இன்று காலை 9 மணிக்கு முதல்வரின் தாயாருக்கு 3-ம் நாள் காரியம் நடைபெற்றது. அதில் நெருங்கி குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.