எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி அதிரடி கைது- அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி!
சேலம்: அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி (வயது 50) இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை.. பள்ளி நிர்வாகம் அலட்சியம்.. கராத்தே மாஸ்டரை துவைத்து எடுத்த மக்கள்!
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பிரிவு உதவியாளராக இருந்தவர் நடுப்பட்டி மணி என்கிற மணி. எடப்பாடி பழனிசாமியுடன் இருந்த நெருக்கத்தை காரணம் காட்டி பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றினார் என்பது புகார்.
சேலம் போலீசில் மோசடி புகார்
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த பொறியாளர் தமிழ்செல்வன், சேலம் மத்தியக் குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் மணி, தம்மிடம் ரூ17 லட்சம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கி தராமல் மோசடி செய்துவிட்டார்; அவருக்கு உடந்தையாக இருந்தவர் செல்வகுமார் என தெரிவித்திருந்தார்.
சேலம் கோர்ட்டில் முன்ஜாமீன் மனு
இதனையடுத்து சேலம் போலீசார் நடுப்பட்டி மணி, செல்வகுமார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் 2 பேரும் திடீரென தலைமறைவாகினர். அத்துடன் தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மணி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி குமரகுரு விசாரித்தார். இவ்வழக்கு விசாரணையின் போது, மணி யாரிடமும் பணம் பெறவில்லை என அவரது தரப்பு வாதிடப்பட்டது.
முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
ஆனால் அரசு தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் தம்பிதுரை, தமிழகம் முழுவதும் மணி மீது இதுபோன்ற மோசடி புகார்கள் வந்துள்ளன. மணியின் உதவி இல்லாமல் செல்வகுமார் பணம் மோசடி செய்திருக்க முடியாது. இதனால் மணிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்று மணியின் முன்ஜாமீன் மனு அண்மையில் சேலம் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இன்று அதிரடி கைது
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மணி மனுத் தாக்கல் செய்தார். இந்த முன்ஜாமீன் மனுவையும் நீதிபதி தமிழ்ச்செல்வி கடந்த வாரம் தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இன்று காலை சேலம் போலீசார் மணியை கைது செய்தனர். அவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? செல்வகுமார் எத்தனை பேரிடம் பணம் வசூலித்தார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.