அதிமுக குறைந்த இடங்களை பிடிக்கும்: இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு.. எடப்பாடியார்!
சேலம்: தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று வெளியான கணிப்பு கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்றுடன் நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று மாலை வெளியானது.
இதில் அதிமுக பெருவாரியான இடங்களை இழந்து பெரும் பின்னடைவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியே அதிக இடங்களை வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நரேந்திரமோடி, அமித்ஷா மீண்டும் தொடர்ந்தால் நாடு என்னாவது? முரசொலியில் தலையங்கம்!
கருத்து திணிப்பு
இது அதிமுக தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,
அதிமுக குறைந்த இடங்களை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு.
நான் வெற்றி பெற்றேன்
2016ல் கருத்துக்கணிப்புகள் பொய்யானது. 2016ல் நான் தோல்வியடைவேன் என்றது கருத்துக்கணிப்பு. ஆனால் நான் வெற்றி பெற்றேன். அதிமுக மாநில கட்சி, தேசியக் கட்சி அல்ல. ஆகையால் தமிழகத்தை பொருத்தவரை மட்டுமே நான் கருத்து கூற முடியும்.
உயிர் முக்கியம்
வாகன பெருக்கத்திற்கேற்ப சாலை விரிவாக்கம் தேவைப்படுகிறது. சேலம் 8 வழிச்சாலைக்கு 7% விவசாயிகள் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். வாகன பெருக்கத்தால் உயிரிழப்பு நேரிடுகிறது, உயிர் முக்கியம் என்பதை சிந்திக்க வேண்டும். மக்களின் நன்மைக்காகவே சாலைகள் போடப்படுகின்றன
புதிய சாலைகள்
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது. இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய சாலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
7 பேர் விடுதலை
வறட்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையை சமாளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.