சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம்.. தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு.. மருந்து கடைகளும் அடைப்பு
சேலம்: சாத்தான்குளம் பகுதியில் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்யக்கோரி இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் மருந்துக்கடைகளும் பங்கேற்றுள்ளனர். காலை 7 மணி முதல் 11 வரை மருந்து கடைகள் தமிழகம் முழுவதும் அடைக்கப்படுவதாக மருந்து கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
காவல்துறையினர் அடக்குமுறையை கைவிடாவிட்டால் மருந்து வணிகர்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இருவரும் கோவில்பட்டி கிளைசிறையில மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்நிலையில் காவல்துறை தாக்கியதால் மரணம் அடைந்ததாக கூறி வணிகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்
கனிமொழி உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.. கண்ணீர் கோஷம்.. சாத்தான்குளம் தந்தை, மகன் உடல் நல்லடக்கம்
கடைகள் அடைப்பு
இந்த நிலையில் இன்று பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் உயிரிழப்பிற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்ய செய்ய வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினரை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு இரண்டு கோடி ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் காலை 7 மணி முதல் 11 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் மூடப்பட்டது அவசர தேவைக்கு மட்டும் மருத்துவமனைக்கு உள்ளே செயல்படும் மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது
எச்சரிக்கை
மேலும் செல்போன் கடையில் நடந்த தாக்குதல் போலவே தமிழகம் முழுவதும் மருந்து கடை பணியாளர்களை காவல்துறையினர் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பேசி வருகின்றனர். இந்த நிலையை காவல்துறையினர் மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் காவல்துறையை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செல்வம் கூறினார்.
போலீசாரை கண்டித்து
சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் போலீசாரின் செயலை கண்டித்து 26-ந் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் கடை அடைப்பு மற்றும் 30-ந் தேதி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் மனு அளிக்கும் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் மருந்து வணிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று அந்த சங்கம் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போராட்ட அறிவிப்பு
முன்னதாக நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற செய்தியை முதல்வர் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் இது போன்ற அநீதி வரும்காலத்திலும், எக்காலத்திலும் நடந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறினார். அதன்படி தமிழகம் முழுவதும் பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளன