சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம்.. எடப்பாடியார் திறந்து வைத்தார்.. விபத்து குறைய வாய்ப்பு
சேலம்: சேலம், கந்தம்பட்டியில் ரூ. 33 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை, தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்தம்பட்டி புறவழிச் சாலையில் தினமும் ஏராளமான காா், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புறவழிச் சாலை பகுதியை கடக்கும்போது விபத்துகளும் அடிக்கடி நிகழ்ந்து வந்தன. இதையடுத்து தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, கந்தம்பட்டி புறவழிச் சாலை பகுதியில் ரூ.33 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கினாா்.
தமிழகத்தில் இன்னும் 10 நாட்களில் கொரோனா கட்டுக்குள் வரும்.. எடப்பாடி பழனிச்சாமி உறுதி
ஓராண்டு பாலம்
கடந்த ஓராண்டு காலமாக இந்த மேம்பாலப் பணிகள் நடந்தன. தற்போது பாலம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் திறந்து வைத்தார்.
மக்களுக்கு பலன்
இந்தப் பாலம் திறக்கப்படுவதால் சேலம், சிவதாபுரம் மற்றும் பனங்காடு, சித்தா் கோவில், இளம்பிள்ளை, இரும்பாலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள். கந்தம்பட்டி புறவழிச் சாலை பகுதி வழியே விவசாயிகள் பலரும் தங்களது விளைபொருள்களை காலதாமதமின்றி செவ்வாய்ப்பேட்டை பகுதிக்கு எடுத்து வர முடியும். விபத்து ஏற்படுவது தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கட்டுப்பாடு
இதன்பிறகு நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டியில், கொரோனாவை ஒழிக்க எல்லாரும் மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். நாமும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும், போலீசும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும், மக்களிடம் சுய கட்டுப்பாடு இருந்தால்தான், நோய் தடுப்பு செய்ய முடியும். நோய் பரவலை தடுக்க முடியும். ஒவ்வொருவருடைய கடமையை உணர்ந்து, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பின்பற்றினால், நோய்களைத் தடுக்கலாம்.
போக்குவரத்து நிறுத்தம்
காவிரியில் நமக்கு கிடைக்கவேண்டிய பங்கை பெறுவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நமக்கு கிடைக்கும். மண்டலங்களிடையே பஸ் போக்குவரத்து இயங்கும்போது, யாரிடமிருந்து எப்படி கொரோனா பரவியது என தெரியாமல் பரவிவிட்டது. எனவேதான், போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.