தம்பிக்கு கொலை மிரட்டல்.. தம்பி மனைவிக்கு ஒருமையில் திட்டு.. பா.ம.க. மாஜி எம்.எல்.ஏவால் பரபரப்பு!
Recommended Video
சேலம்: சொந்த தம்பிக்கே மிரட்டல் விடுத்துள்ளார் பாமகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ. இது பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பாமகவை சேர்ந்த கண்ணையன் என்கிற கண்ணன். இவருக்கும் இவரது உடன் பிறந்த சகோதரர் மோகன் என்பவருக்கும் கேஸ் ஏஜென்சி நடத்துவதில் தகராறு இருந்து வந்துள்ளது.
கண்ணையனின் மனைவி ஜானகிக்கு சொந்தமான நிலத்தில், குத்தகை அடிப்படையில் மோகன் கேஸ் ஏஜென்சி நடத்தி வந்ததாகவும், இதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக புதிய இடத்தில் குடோன் அமைத்து கேஸ் ஏஜென்சியை நடத்திட முடிவு செய்து தாரமங்கலம் அருகே இடம் தேர்வு செய்து, சுற்றுசுவர் அமைத்து அதற்கான பணிகளை மோகன் மேற்கொண்டு வருகிறார்.
சம்பவ நாளன்று குடோனுக்கு கேஸ் சிலிண்டர்களை இறக்க லாரி ஓன்று வந்தது. இதனையறிந்த கண்ணையன் சிலருடன் அங்கு வந்து, குடோனுக்குள் சிலிண்டர்களை இறக்க கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து இது குறித்து மோகன் , காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்த போதும், அவர்களை கண்டு கொள்ளாத பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அவரது அடியாட்களும், மோகனின் கேஸ் ஏஜென்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள சுற்று சுவர்களை இடித்து தள்ளினர்.
மேலும் மோகனையும் அவரது மனைவியான ஆண்டாளையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவன் இருந்தாதானேடி நீ செய்வே என்றும் தம்பி மனைவியிடம் ஒருமையில் பேசினார் கண்ணையன். காவல்துறையினரின் கண் எதிரே நடைபெற இந்த சம்பவங்களை அவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டே இருந்தனரே தவிர, தடுக்க முயற்சிக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்து உள்ளது.
மேலும் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரியையும் அவர்கள் சிறைப்பிடித்தனர். பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் இந்த செயல்பாட்டால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.