பாஜக சீனியர் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்-பெரியாருக்கு எதிராக சேலம் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்!
சேலம்: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் கே.என். லட்சுமணன் (கே.என். லக்ஷ்மணன்) (வயது 92) சேலத்தில் இன்று காலமானார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் கே.என். லட்சுமணன். தமிழக பாஜகவுக்கு 2 முறை தலைவராக பதவி வகித்தவர்.
சென்னை மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரையும் பதவி வகித்தார் லட்சுமணன். முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் சேலம் செவ்வாய்ப்பேட்டை இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று இரவு கே.என். லட்சுமணன் காலமானார். கே.என். லட்சுமணன் மறைவு குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக, தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் திரு.K.N.லெக்ஷ்மணன் இயற்கை எய்தினார் அவருடைய ஆத்மா நற்கதிஅடைய பிரார்த்திப்போம்! ஓம் ஷாந்தி! என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. கே.என்.லக்ஷ்மணன் அவர்கள் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட வழக்கு: திமுக எம்.எல்.ஏ. கார்த்திக்குக்கு முன்ஜாமீன்
ரஜினி சர்ச்சையில் கே.என். லட்சுமணன்
நடிகர் ரஜினிகாந்த் சிக்கிய ராமர் படம் தொடர்பான சர்ச்சையில் அண்மையில் ஊடகங்களில் கே.என். லட்சுமணன் பேட்டி முக்கியத்துவம் பெற்றிருந்தது. துக்ளக் ஆண்டுவிழாவில் பங்கேற்று ரஜினிகாந்த் பேசினார். அப்போது, 1971 சேலத்தில் பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக எடுத்து வரப்பட்டு செருப்பால் அடிக்கப்பட்டன என குறிப்பிட்டிருந்தார்.
சேலம் நிகழ்வு- ரஜினி மீது வழக்கு
ஆனால் சேலம் மாநாட்டில் நடந்த சம்பவமே வேறு; ரஜினிகாந்த் பொய் பேசிகிறார் என பெரியார் தொண்டர்கள் கொதித்தனர். ஜனசங்கத்தினர் பெரியார் ஊர்வலம் மீது செருப்பு வீசினர். அந்த செருப்புதான் ராமர் சிலை மீது பட்டது. அதை தொடர்ந்தே ராமர் சிலை செருப்பால் அடிக்கப்பட்டது என பெரியார் தொண்டர்கள் கூறினர். இது தமிழகம் முழுவதும் பெரும் விவாதமானது. ரஜினிகாந்தை மன்னிப்பு கேட்கவும் பெரியார் தொண்டர்கள் வலியுறுத்தினர். ஆனால் ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்,. இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
கே.என். லட்சுமணன் பேட்டி
இந்த பிரச்சனையில் கே.என். லட்சுமணன் அளித்த பேட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. 1971-ல் பெரியாரின் சேலம் மூடநம்பிக்கை மாநாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது ஜனசங்கம். அந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் கே.என். லட்சுமணன். அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் கூறியது சரி என ஆதரவு தெரிவித்து பேசியிருந்தார். இதை ரஜினிகாந்தும் தமது பேட்டி ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
லட்சுமணனுடன் மோடி பேச்சு
இதன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா லாக்டவுன் காலத்தில் கே.என். லட்சுமணனை மோடி தொடர்பு கொன்டு பேசினார். கே.என். லட்சுமணின் உடல்நலம் குறித்து மோடி நலம் விசாரித்ததாக வீடியோ ஒன்றில் கே.என். லட்சுமணன் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் இன்று லட்சுமணன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.