பழைய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பேரீச்சம் பழம் எல்லாம் பழசு... இலவச வைபை தான் புதுசு!
சேலம் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு இலவச வைபை தரும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம்: பழைய பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொடுத்தால் இலவச வைபை தரும் புதுமையான இயந்திரத்தை சேலம் மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. அபராத பயத்தால் பிளாஸ்டிக் பைகளை விற்க கடைகள் தயங்குகின்றன. இதனால், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலத்தைப் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள அம்மாவட்ட நிர்வாகம் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக பழைய பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொடுத்தால் இலவச வைபை தரும் புதுமையான இயந்திரத்தை அம்மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தினுள் 250 மி.லி முதல் 2.25 லிட்டர் வரையிலான காலி பிளாஸ்டிக் பாட்டில்களை போட முடியும். அவை அரைக்கப்பட்டு இயந்திரத்தில் சேகரிக்கப்படுகிறது.
இவ்வாறு போடப்படும் காலியான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக ஐந்து நிமிடம் இலவசமாக செல்போனில் சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும், ஐந்து நிமிட இலவச வைபை மற்றும் 250 மிலி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வைபையோடு, சுத்தமான குடிநீரும் இலவசமாகக் கிடைப்பதால் இந்த இயந்திரத்தை பேருந்து நிலையம் வரும் பயணிகள் ஆர்வமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மக்கள் இத்திட்டத்திற்கு அளித்துள்ள ஆதரவால், விரைவில் இந்தத் திட்டத்தை சேலம் மாநகராட்சி முழுவதும் விரிவுபடுத்தப்படும் திட்டமிடப்பட்டுள்ளது.