தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி பாமக... தேமுதிகவுக்கு குட்டு வைத்த ஜி.கே.மணி
சேலம்: தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்க வேண்டும் என்றும், கிராமம் கிராமமாக சென்று வீடு தவறாமல் ஆதரவு திரட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக பாமக உருவெடுத்துள்ளதாகவும், அதை மனதில் வைத்து அந்த இடத்தை தக்கவைக்கும் பொருட்டு பணிகள் இருக்க வேண்டு என கேட்டுக்கொண்டார்.
திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய கட்சி யார் என்பதில் பாமக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம், போன்ற கட்சிகளிடையே போட்டி நிலவி வருகிறது. தேமுதிக தான் 3-வது பெரிய கட்சி என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி வரும் நிலையில், பாமக தான் 3-வது பெரிய கட்சி எனக் குறிப்பிட்டு பேசி தேமுதிகவுக்கு ஜி.கே.மணி குட்டு வைத்துள்ளார்.
"ஐயா.. காரை நிறுத்துங்க".. ஓடிவந்த முதியவர்.. காரை நிறுத்திய கலெக்டர்.. பெரியவர் சொன்ன கதை.. சோகம்!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரம் தாழ்ந்து பேசுவது ஆரோக்கிய அரசியலுக்கு வழி வகுக்காது என்றும், அவரது பேச்சு கடும் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார். இது போன்று பேசும் போது, அந்த நிர்வாகியை அழைத்து கட்சி தலைவர் கண்டிக்க வேண்டியது பொறுப்பு எனவும் கூறினார். கருணாநிதியை பற்றி ஒரு முறை பாமக நிர்வாகி விமர்சித்து பேசிய நிலையில், உடனடியாக அந்த நிர்வாகியை தொடர்புகொண்ட ராமதாஸ் கடுமையாக கண்டித்து மன்னிப்பு கேட்க வைத்ததாக பழைய நினைவலைகளை பகிர்ந்தார்.
Recommended Video
தமிழகத்தில் பெரிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படுவது வரவேற்க வேண்டிய ஒன்று என்றும், அந்த வகையில் சேலம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பாமக கோரிக்கை வைத்திருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
இதனிடையே காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்ததை சட்டமாக இயற்றி மத்திய அரசு ஒப்புதலுடன் அதை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை விடுத்தார்.