சேலத்தில் பலத்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் - வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் மக்கள் அவதி
சேலம் மாநகரில் பெய்த பலத்த மழையால் தண்ணீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்தது. வீடுகளுக்குள் மழைநீரும் கழிவுநீரும் சேர்ந்து உள்ளே புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
சேலம்: தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. சேலம் மாநகரத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கழிவுநீரும் கலந்து வந்த காரணத்தால் துர்நாற்றம் வீசியது பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
Recommended Video
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலத்தில் மிதமான மழை பெய்தது. நேற்று மதியம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சுமார் 3 மணி அளவில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம், ஓமலூர், காடையாம்பட்டி, ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை நீடித்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது.
சேலம் மாநகர பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக சேலம் குகை பகுதியில் உள்ள ராமலிங்கசாமி தெரு பகுதியில் ஆழமான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். சாக்கடை கால்வாயை அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், சூரமங்கலம், பெரமனூர், அழகாபுரம், அஸ்தம்பட்டி, மணக்காடு, கிச்சிப்பாளையம், அன்னதானபட்டி, செவ்வாய்பேட்டை, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சேலம் தமிழ்ச்சங்க சாலை, பெரமனூர் நாராயண பிள்ளை வீதி ஆகிய இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. என்றாலும் பல பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியது. துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
சத்திரம் பகுதியில் போதிய அளவு சாக்கடை கழிவுநீர் செல்ல வசதி இல்லாததால் இது போன்ற அவல நிலை அடிக்கடி ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சத்திரம் பகுதியில் கழிவுநீர் செல்ல பெரிய அளவில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் சிவதாபுரம் பகுதியில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் வழிந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அதே போன்று சூரமங்கலம் பகுதியில் பலரது வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. சூரமங்கலத்தை அடுத்த புது ரோடு ரயில் நகர் பகுதியில் நேற்று பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டில் வசிப்பவர்கள் பாத்திரங்கள், வாளிகளை கொண்டு தண்ணீரை வெளியேற்றினர்.
நீட் 2020: நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டாம் - மத்திய அரசு
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், கெங்கவல்லி, தேவூர் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.