சேலத்தில் இரும்பு உருக்காலையை காமராஜர் போராடி கொண்டுவந்த வரலாறு இதுதான்!
சென்னை: சேலத்தில் இரும்பு உருக்காலையை உருவாக்க முன்னாள் முதல்வர் காமராஜர் எப்படி போராடினார் என்பதை விவரிக்கிறார் திமுகவின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
http://ksradhakrishnan.in இணையதளத்தில் இது தொடர்பாக அவர் எழுதியுள்ளதாவது:"
சேலத்திலுள்ள கஞ்சமலை வடக்குப் படுகை இரும்புத் தாது சுரங்கத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலைக்குக் கொடுக்காமல், தனியார் நிறுவனமான ஜிண்டலுக்குத் தமிழக அரசு நியாயங்களைப் புறக்கணித்துவிட்டு உரிமம் வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் சேலம் இரும்பாலை அமைந்தது. சேலம் இரும்பாலைக்கும், சேதுக் கால்வாய்க்கும், தூத்துக்குடி துறைமுகத்துக்கும் பேரறிஞர் அண்ணா எழுச்சி நாள் என்று அறிவித்தார். அன்று தமிழகம் முழுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த சேலம் இரும்பாலை எப்படி தமிழகத்துக்கு வந்தது என்பது தமிழகத்தின் சரித்திரத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று.
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது இதுகுறித்த முயற்சிகளை மேற்கொண்டார். 'காமராஜ் பிளான்' என்று முதல்வர் பொறுப்பிலிருந்து விலகிய அவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார். அன்றைய பிரதமரான லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் நீலம் சஞ்சீவ ரெட்டி மத்திய அரசில் உருக்குத் தொழில் அமைச்சராக இருந்தார். தன்னுடைய மாநிலமான ஆந்திரத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் இந்த இரும்பாலையை அமைக்க விடாப்பிடியாக முயன்றார் அவர்.
காமராஜ், அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தியிடம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பிரதமர் சாஸ்திரியை சந்தித்து சேலத்துக்கு இரும்பாலை வேண்டும் என்று வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார். சாஸ்திரியைச் சந்தித்து இதுகுறித்து தமிழக அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டனர். அதன்பின்பு காமராஜ் அவசியம் இரும்பாலை சேலத்துக்கு வேண்டும் என்று சாஸ்திரியிடம் கேட்டுக்கொண்டார். அதன் காரணமாகத்தான் சேலத்தில் இந்த இரும்பாலை அமைந்தது.
முதல்வராக கருணாநிதி இருந்த போது பிரதமர் இந்திரா காந்தி 1970 செப்டம்பர் 16 அன்று சேலம் இரும்பு உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார்.சேலம் இரும்பாலையின் ரிஷிமூலம், நதிமூலம் என்று ஆராய்ந்தால் பல செய்திகள் உள்ளன.
தமிழகத்தின் பெருமிதமான சேலம் உருக்காலை தனியார் மயமாக்கத்தின் பின்னணி இதுதான்!
கிழக்கிந்திய கம்பெனியின் குடிமைப் பணியில் இருந்த ஜோஷியா மார்ஷெல் கீத் என்பவர்தான் சேலம் கஞ்சமலை பகுதிகளில் இரும்பு இருப்பதை முதலில் கண்டிறிந்தவர். அதன்பிறகு அவர் சேலம் அருகிலுள்ள பூலாம்பட்டியில் 1847இல் இரும்பு தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவி, நிதி நெருக்கடியின் காரணமாக 1858இல் அந்த ஆலையை மூடிவிட்டார். கீத்தால் தயாரித்து இங்கிருந்து அனுப்பப்பட்ட இரும்பால்தான் இங்கிலாந்தில் பிரிட்டானியா டியூப்ளார் பாலமே கட்டப்பட்டது என்ற செய்தி இப்போதைய தலைமுறையினருக்கு வியப்பாக இருக்கும். சேலம் உருக்காலை உலக அளவில் புகழ் பெற்றது. மலேசியாவின் ரெட்டை கோபுரம், மெல்பேர்ன் மைதானம் போன்றவை சேலம் இரும்பைக் கொண்டுதான் அமைக்கப்பட்டுள்ளன.
சேலத்தைச் சேர்ந்த அருணாசல ஆசாரி தயாரித்த உருக்கு வாள் லண்டன் தொல்பொருள் காட்சியகத்தில் அவரது பெயரோடு சேலம், தமிழ்நாடு என்று எழுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 1893இல் தாமஸ் ஷொலாண்டு, 1917-18இல் டாக்டர் வி.எஸ்.துவே, 1944இல் எம்.கே.என். அய்யங்கார் ஆகியோர் கஞ்சமலை இரும்புத் தாதுவை ஆய்வு செய்து அரசிடம் அறிக்கைகள் வழங்கினர். ஆனால், உருக்கு உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி அப்போது கிடைப்பதற்கு பெரும் பிரச்சினையாக இருந்தது என்பதால், உருக்காலை முயற்சி அடுத்த கட்டத்தை எட்டவில்லை.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அன்றைய தி.மு.க. உறுப்பினர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர் அங்கே இரும்பாலை எப்படி உள்ளது என்று கவனித்து அதுபோன்ற உருக்காலையை நெய்வேலி நிலக்கரிக் கொண்டு சேலத்தில் அமைக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பினர். அதன்பின் மேற்கு ஜெர்மனி நிபுணர்கள் கஞ்சமலை வந்து சேலத்தில் உருக்காலை அமைக்க முடியுமா என ஆய்வு செய்தனர்.
1960க்குப் பின் தமிழக அரசால் இந்த உருக்காலைக்கு 24,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து ஜப்பான் நாட்டோடும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு 2.5 லட்சம் டன் இரும்பு உற்பத்தி செய்யலாம் என்று 1966இல் தமிழக அரசு ஓர் அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியலு. 1970இல் சேலம், விசாகப்பட்டினம் விஜயநகரில் உருக்காலைகள் அமைக்க, மத்திய அரசு முறைப்படி அறிவிப்பு செய்தது. 1973இல் சேலம் உருக்காலை இந்திய உருக்காலை ஆணையத்தின் சார்பு நிறுவனமாக அறிவிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூ.136 கோடி மூதலீட்டில் 32 ஆயிரம் டன் திறன்கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (குtச்டிணடூஞுண்ண் குtஞுஞுடூ) உற்பத்தி செய்யும் குழு உருட்டாலை திட்டத்துக்கு மத்திய அரசு 1977இல் ஒப்புதல் அளித்தது.
இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார்.