இப்படியே குடிச்சு கூத்தடித்தால் குடும்பம் நடத்த வர மாட்டேன்.. தங்கமணி கறார்.. ஆவேசமான பாலசுப்பிரமணி!
சேலம் அருகே குடிபோதையில் மனைவியை கணவன் கொலை செய்துள்ளார்
சேலம்: "இப்படியே குடிச்சு கூத்தடித்தால், குடும்பம் நடத்த வர மாட்டேன்" என்று தங்கமணி கறாராக சொல்லி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணி, கொடுவாளை எடுத்து வந்து மனைவி கழுத்தை அறுத்துவிட்டார்.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி 47 வயசாகிறது. தங்கமணி என்ற மனைவியும், மகள், மகன் உள்ளனர். மகளுக்கு கல்யாணமும் ஆகிவிட்டது.
பாலசுப்பிரமணி கூலி வேலை செய்கிறார். ஆனால் ராத்திரியில் தினமும் குடிச்சுட்டு வந்து தங்கமணியை போட்டு அடிப்பது வழக்கமாக வைத்துள்ளார்.
இப்படியே அடியும், உதையும் வாங்க தங்கமணியால் முடியவில்லை. அதனால் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார். மனைவி வீட்டில் இல்லாதது பாலசுப்பிரமணியத்துக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
அதனால் மாமியார் வீட்டுக்கு போய் "சண்டையை மறந்துடு.. இனிமே சந்தோஷமா வாழலாம் வா"என்று கூப்பிட்டுள்ளார். அப்போதும் பாலசுப்பிரமணி செம போதையில்தான் இருந்தார். ஆனால் தங்கமணி அதற்கு மறுப்பு தெரிவிக்கவும், திரும்பவும் அங்கேயே சண்டை ஆரம்பமாகி உள்ளது.
ஆத்திரம் அதிகமாகிவிட்ட பாலசுப்பிரமணி, வீட்டுக்குள் கிடந்த கொடுவாளை எடுத்து வந்து தங்கமணியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி விட்டார். தங்கமணி ரத்தம் சொட்டச் சொட்ட தெருவுக்கு ஓடி வந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் தங்கமணியை ஆம்புலன்சில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தும், வழியிலேயே தங்கமணி இறந்துவிட்டார். இந்த கொலை குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.