எனக்கு சினிமா பார்ப்பது பிடிக்கும்.. நிஜம், நிழல் வேறுபாட்டை ரசிகர்கள் உணர வேண்டும்: அன்புமணி
சினிமா பார்ப்பது பிடிக்கும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
சேலம்: சினிமா பார்ப்பது தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முதன்முதலில் பாட்டாளி மக்கள் ஆரம்பித்தது முதல், சமீப காலம்வரை நடிகர்கள் கட்சிக்குள் வரக்கூடாது என்றும், நடிகர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் பலமாக கூறி வந்தது.
அன்புமணி விளக்கம்
சமீபத்தில் கட்சியில் நடிகர் ரஞ்சித்திற்கு புதிய மற்றும் பெரிய பொறுப்பு தரப்பட்டது. இதனால் நடிகர்களை பாமக ஏற்றுக் கொள்கிறதா, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா என்று பலதரப்பில் சந்தேகம் எழுந்தது. இதற்கு அடுத்த ஓரிரு தினங்களிலேயே ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி விளக்கம் அளித்தார்.
[தமிழை தொடாமல் இனி யாரும் பிழைக்க முடியாது.. பாஜகவுக்கும் அது புரியும்! ]
விபத்து ஏற்பட வாய்ப்பு
"நான் எப்போதுமே சினிமாவை எதிர்க்கவில்லை. சினிமா கலாச்சாரத்தைத் தான் எதிர்க்கிறேன். ஹீரோவின் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் முதல் பீர் அபிஷேகம் வரை ரசிகர்கள் செய்கிறார்கள். இப்படி கட் அவுட்களில் ஏறி நின்று கற்பூரம் ஏற்றுவது உள்ளிட்ட அபிஷேகங்களை செய்வதால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
சினிமா பிடிக்கும்
இந்நிலையில், நேற்று சேலத்தில் மாணவர், மாணவியர் பங்கேற்ற ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு மாணவி, நல்ல அரசியல் தலைவரை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று அன்புமணியிடம் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அன்புமணி, சினிமா குறித்த தன் பார்வையை விளக்கினார். "எனக்கு சினிமா பார்ப்பது ரொம்ப பிடிக்கும். அதேபோல என் குடும்பத்திலும் அனைவருமே சினிமா பார்ப்போம். அது ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவுதான்.
அரிவாள், புகை பிடிப்பது
ஆனால், பலரும் சினிமாவில் வருவதை நிஜம் என்று நம்புகிறார்கள். சினிமாவில் சிலர் புகை பிடிப்பவர்களாகவும், அரிவாள் எடுத்து வன்முறையில் ஈடுபடுபவர்களாகவும் வருகிறார்கள். இவர்களை பின்பற்றும் ரசிகர்களும் நாளை இதையே செய்ய மாட்டார்களா? சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல.
அரசியல் தெரிய வேண்டும்
எனவே அரசியல் தலைவர்களாக வருபவர்கள், அவர்களை சார்ந்தவர்களை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க இருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் அவசியம் அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் மாணவர்களிடையே உரையாற்றினார்.