ஆப்பிள் ‛ஆட்டை’க்கு பின் தக்காளி வேட்டை! ! சிசிடிவியால் சிக்கிய ‛சின்ராஜ்’! தட்டித்தூக்கிய போலீஸ்
சேலம்: தக்காளி விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்ட நிலையில் சேலம் அருகே டிப்டாப் உடையணிந்து தக்காளி கிரேடை நைசாக திருடி சென்ற ‛சின்ராஜை' போலீசார் கைது செய்தனர். ஆப்பிள் ‛ஆட்டை'க்கு பிறகு தக்காளி வேட்டையில் ஈடுபட்ட அவரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளின் விலை புதிய உச்சம் தொட்டது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 யை தாண்டியது. அதன்பிறகும் விலையேற்றம் நிற்கவில்லை.
2 பிஞ்சு குழந்தைகள், நிறைமாத கர்ப்பிணிகள்.. மொத்தம் 5 பேர் தற்கொலை! அதிர்ந்த ராஜஸ்தான்
தங்கம் போல் தொடர்ந்து தக்காளி விலை ஏறி வந்தது. அதிகபட்சமாக ரூ.110 வரை சில இடங்களில் விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் சிரமப்பட்டனர். மேலும், சமையலில் தக்காளி பயன்பாட்டை குறைத்தனர்.
வெங்காயத்தை போல் தக்காளி
சில மாதங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை விண்ணை தொட்டதுபோன்று தக்காளியின் விலை தமிழகத்தில் உச்சமடைந்தது. தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து வந்தது தான் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.100யை கடந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.
சேலம் பகுதியில் திருட்டு
இந்த நிலையில் தக்காளி விலையேற்றத்தை பயன்படுத்தி சில இடங்களில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறின. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி திருட்டு அதிக அளவில் நடைபெற்றது. குறிப்பாக இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு போனது. இதனால் சிறு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஸ்கூட்டரில் வந்து கைவரிசை
இந்த நிலையில் பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் முன்பு இருந்த தக்காளி கிரேடை யாரோ மர்மநபர் திருடி சென்றார். தக்காளி திருடும் ஆவலில் இருந்த அவர் அந்தபகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை பார்க்கவில்லை. இதனால் தக்காளி திருடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதில்டிப்டாப் இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் வந்து கடை முன்பு நிற்கிறார். சுற்றி அனைத்து இடங்களிலும் பார்த்த அந்த நபர் ஆட்கள் வரவில்லை என்பதை அறிந்து கடை முன்பு இருந்த தக்காளி கிரேடை திருடி ஸ்கூட்டரில் வைத்து அங்கிருந்து வேகமாக புறப்பட்டு செல்கிறார்.
யார் அந்த நபர்?
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. முதற்கட்டமாக கடை உரிமையாளர் மற்றும் தக்காளி வியாபாரிகள், தக்காளி திருடிய டிப்டாப் இளைஞரின் வீடியோவை வைத்து பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்க துவங்கினர். சிசிடிவியில் பதிவான ஸ்கூட்டரின் பதிவெண் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர்.
கைது
இந்த விசாரணையின் அடிப்படையில் தக்காளி திருடியதாக வெண்ணந்தூர் தங்கசாலை வீதியை சேர்ந்த சின்ராஜ் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சேலம் செவ்வாய்பேட்டையில் ஆப்பிள் திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்து தக்காளியை திருடி கைதானது தெரியவந்தது. இதுபற்றி மகுடஞ்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.