இந்திய மொழிகளின் 'அம்மா' தமிழ்... ஜல்லிகட்டு காளை போல பங்கு சந்தை.. ராஜ்நாத்சிங் கலக்கல் பேச்சு
சேலம்: இந்திய மொழிகளின் 'அம்மா'வாக தமிழ் மொழி திகழ்கிறது என்றும் சேலத்தில் மோடி இட்லி பிரபலமடைந்து வருவதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார்.
சேலத்தில் இன்று நடைபெற்ற பாஜக இளஞரணி மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
சகோதர, சகோதரிகளே! அனைவருக்கும் வணக்கம். வெற்றிவேல்! வீரவேல்! 7.5 கோடி தமிழ் மக்கள்... இதில் 1.30 கோடி இளைஞர்களைக் கொண்ட தமிழ் மக்களுக்கு என் வணக்கம். அதுவும் தொழில்முனைவோரும், பழமையான பண்பாடும் கொண்ட சேலம் மக்களிடம் நின்று பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் மிகப் பெரிய மாவீரர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்டோர் ராணுவம், கப்பற்படைக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்த மக்களுக்கு என் வணக்கங்கள். உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. தமிழ் மிகவும் அழகான மொழி. இந்திய மொழிகளுக்கு அம்மாவாக தமிழ் மொழி விளங்குகிறது.
என் உடம்பில் உயிர் இருக்கும் வரை தேசத்தின் ஒரு இஞ்ச் நிலத்தைகூட விட்டுதரமாட்டேன்: ராஜ்நாத்சிங்
அறிவுபெட்டகம் திருக்குறள்
மகாத்மா திருவள்ளுவர் பிறந்த மண். அவரது திருக்குறள் நமக்கு மிகப் பெரிய அறிவுபெட்டகமாக இருக்கிறது. திருக்குறள் வழிதான் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மிகவும் அழகான இந்த தமிழ் மொழியில் பேச முடியாமல் போனதற்கு நான் வருந்துகிறேன்.
அதிமுக-பாஜக அணி
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியானது மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பெற்று சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என விரும்புகிறேன். சேலம் மாம்பழம், இரும்பு ஆலை, சேலம் மரவள்ளிக்கிழங்கு போன்றவை நீண்டகாலமாக பிரபலமாக இருக்கிறது. அண்மையில் சேலத்தில் மோடி இட்லி பிரபலமாகவும் மக்கள் அதை விரும்புவதாகவும் கேள்விபட்டிருக்கிறேன்.
சேலம்- மோடி இட்லி
நீங்கள் மோடி இட்லியை விரும்புகிறீர்களா? மோடி இட்லியை விரும்புகிறவர்கள் இருகரம் சேர்த்து கரவொலி எழுப்புங்கள். கொரோனாவை தடுக்க நாம் உருவாக்கிய தடுப்பூசி இன்று பல நாடுகளுக்கும் பயன்பட்டு வருகிறது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
பங்கு சந்தையும் ஜல்லிக்கட்டும்
நாளுக்கு நாள் தேசத்துக்கான அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. நமது பங்குச் சந்தை ஜல்லிக்கட்டு காளை போல வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ6,000 மத்திய அரசு வழங்கி வருகிறது. வீடுகள், கழிவறைகள், சாலைகள் ஆகியவற்றை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் 8 வழிச்சாலை
நாட்டின் பாதுகாப்பு வழித்தடங்களில் ஒன்று தமிழகத்தில் அமைக்க வேண்டும் என தேர்வு செய்வதவர் பிரதமர் மோடி. இந்த பொருளாதார வழித்தடத்தில் இடம்பெற்றிருக்கிற நகரங்களில் ஒன்று சேலம். இளைஞர்களை வேலைகளை உருவாக்குபவர்களாக உருவாக்கவே மத்திய அரசு விரும்புகிறது. சென்னை- சேலம் நெடுஞ்சாலை நடப்பாண்டில் செயல்படுத்தப்படும். முத்ரா திட்டத்தில் அதிகமாக கடன்பெற்றவர்கள் தமிழக இளைஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுகள். ரூ33,700 கோடிக்கு தமிழக இளைஞர்கள் கடன் பெற்றுள்ளனர்.
தமிழகமும் வாஜ்பாயும்
தமிழகத்தின் அப்துல்கலாமை தேசத்தின் ஜனாதிபதியாக்கியவர் வாஜ்பாய். 1974-ல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது அப்போது கடுமையாக எதிர்த்தவர் வாஜ்பாய். அத்துடன் உச்சநீதிமன்றத்துக்கும் போனார் வாஜ்பாய். வாஜ்பாய் தலைமையிலான பாஜகவின் முதலாவது அரசுக்கு ஆதரவு தந்தது ஜெயலலிதா என்பதை மறந்துவிடமாட்டோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
யாழ். சென்ற ஒரே பிரதமர்
ஈழத் தமிழ் அகதிகள் விஷயத்தில் பிரதமர் மோடி நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதல் இந்தியாவின் பிரதமர் மோடி. அப்போது 27,000 வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி. ஈழத் தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழக மீனவர்கள்
இலங்கை சிறைகளில் இருந்து 1,600க்கும் அதிகமான மீனவர்களை மத்திய அரசு விடுதலை செய்திருக்கிறது. 300 மீனவர் மீன்பிடி படகுகளும் இலங்கையால் விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.