சினிமாக்காரனாக பார்க்கவில்லை... மாற்றத்தின் கருவியாக மக்கள் என்னை பார்க்கிறார்கள் -கமல்
சேலம்: சினிமாக்காரனாக மக்கள் தன்னை பார்க்கவில்லை என்றும் மாற்றத்தின் கருவியாக மக்கள் தன்னை பார்ப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார். சினிமாகாரனாக மக்கள் தன்னை பார்க்க வேண்டும் என நினைத்தால் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு வீடுகளில் அமர்ந்தே பார்த்திருப்பார்கள் என்றும் இப்படி கால் கடுக்க வந்து நிற்க வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார்.
நேர்மையை நோக்கிய மாற்றத்துக்கு தமிழகம் தயாராகி வருவதாகவும் அதற்கான கருவியாக தன்னை மக்கள் கருதுவதாகவும் கூறினார். மேலும், மைக் பிடிப்பவர்கள் தான் மக்கள் மத்தியில் உறுதிமொழி கொடுப்பார்கள் என்றும் ஆனால் மக்கள் தன்னிடம் அவர்கள் ஒரு உறுதிமொழி கொடுப்பதாகவும் கூறினார்.
நீங்கள் தான் நாளை என்ற உறுதிமொழியை மக்கள் கொடுப்பதால் தனக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் நாளை நமதே எனவும் முழங்கினார். முதல்நாளான நேற்று சேலம் மாவட்டம் ஏற்காடு, ரெட்டியப்படி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்த கமல் இன்று முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடிக்கு செல்கிறார்.
சேலம் மாவட்டத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் செல்லும் கமல்ஹாசன் இரவு மீண்டும் சேலத்தில் தங்குகிறார். நாளை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செல்கிறார்.