1 ஏக்கர் காடு இருந்துச்சும்மா... 1 மணி நேரத்துல பறிச்சுடாங்க... கனிமொழியிடம் கதறிய மூதாட்டி..!
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார் கனிமொழி எம்.பி.
இன்று காலை கொங்கணாபுரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்தித்து உரையாடிய கனிமொழி, மாலை தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
அப்போது மூதாட்டி ஒருவர் தங்கள் விளைநிலத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பைப்லைன் திட்டத்துக்காக கையக்கப்படுத்தியதை கூறி கண்ணீர் விட்டு கதறினார்.
சேலத்தில் தொடக்கம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தூதுவர்களாக 20 பேர் கொண்ட குழுவினர் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற முழக்கத்தோடு பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. அதில் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரமும் கனிமொழி எம்.பி. இன்றும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றனர்.
முதல்வர் மாவட்டம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் பிரச்சார பயணத்தை தொடங்கியிருக்கும் கனிமொழி இன்று காலை மகளிர் சுய குழுக்களை சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், மகளிர் சுய உதவி குழுக்களை அதிமுக அரசு நாசப்படுத்தி வைத்துள்ளதாக வேதனை தெரிவித்தார். மேலும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனுக்கு தாம் அனுப்பியதாகவும் இருப்பினும் அதன் மீது நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை எனவும் கூறினார்.
கனிமொழி ஆறுதல்
பின்னர் மாலை புதுப்பாளையத்தில் விவசாயிகளை சந்தித்து பேசிய கனிமொழியிடம், வள்ளியம்மாள் என்ற மூதாட்டி வெடித்து அழத் தொடங்கினார். 'ஒரு ஏக்கரா காடு வச்சுருந்தோம்மா, அதை ஒரு மணி நேரத்துல பைப்லைன் திட்டத்துக்காக கையெழுத்து வாங்கிட்டாங்க, இதை நினைச்சே என் வீட்டுக்காரரு இறந்துட்டாரு'' எனக் கூற, மேடையில் இருந்து இறங்கி அந்த மூதாட்டியின் கரம் பற்றி ஆறுதல் கூறினார் கனிமொழி.
கனிமொழி உறுதி
மேலும், விவசாயிகள் தன்னிடம் கூறிய குறைகள் மற்றும் கோரிக்கைகளை அண்ணனிடம் கூறுகிறேன் எனத் தெரிவித்த கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்ற உறுதிமொழியை அளித்தார்.