'சேலம்தான் வேண்டும்'.. அடம்பிடிக்கும் சுதீஷ்... முடியாது என முகம் திருப்பும் அதிமுக!
சேலம் தொகுதியை தனக்கு தருமாறு எல்கே சுதீஷ் தொடர்ந்து கேட்டு வருகிறார்.
- கோயா
சேலம்: இந்த முறை தனக்கு சேலம் தொகுதியை தந்தே ஆக வேண்டும் என்று எல்.கே. சுதீஷ் அடம்பிடித்து கேட்டு வருகிறாராம்!
மக்களவை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி உறுதிசெய்யப்பட்ட நிலையில், அந்த அணியில் தேமுதிக, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளையும் இழுத்துப்போடும் பணி தீவிரமடைந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவது குறித்து தேமுதிக பேசி வருவதாக அக்கட்சியின் இளைஞரணி செயலர் சுதீஷ் தெரிவித்திருந்தார். அதே சமயம் பாமக இடம் பெறும் கூட்டணியில் அங்கம் வகிப்பதை தேமுதிக விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
பாமக வேட்பாளர்
ஏனெனில் கடந்த முறை அதிமுக இல்லாத தேமுதிக, சேலம் மக்களவை தொகுதியை போராடி பெற்று தோல்வியை தழுவியது. 2014-ல் பாமக சார்பாக அருள் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் செய்து வந்த நிலையில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் அடம் பிடித்து சேலத்தை வாங்கி படுதோல்வி அடைந்தார்.
பாமக உள்ளடி வேலை
இதற்கு பாமகவின் உள்ளடி வேலைதான் தேர்தலில் தோற்க காரணம் என தேமுதிக நினைக்கிறது. அதனால்தான் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற விரும்பவில்லை. இந்த நிலையில் சேலம் தொகுதியை இப்போதும் தேமுதிக கேட்கிறதாம்.. அதுவும் சுதீஷ்தான் இந்த தொகுதிதான் என்று பிடிவாதமாக இருக்கிறாராம்.
சொந்த மாவட்டம்
ஆனால் கண்டிப்பாக கொடுக்க முடியாது என அதிமுகவில் இருந்து பதில் வந்ததாம். தனது சொந்த மாவட்டம் என்பதால் பார்த்து பார்த்து பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இம்முறை சேலத்தில் அதிமுக வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளாராம். வேண்டுமானால் கள்ளக்குறிச்சியை தேமுதிகவுக்கு தருகிறோம் என அதிமுக கூறியதாம்.
வேறு வழியில்லை
இதற்குதான் தொடர்ந்த இந்த விஷயத்தில் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக பாஜகவை விட்டால் வேறுவழியில்லை என்ற நிலை தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், திமுக தரப்பில் அந்தக் கட்சியை திரும்பிக்கூட பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
உதாசீனம்
அதற்கு காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மறைந்த கருணாநிதி விஜயகாந்துக்கு இறங்கி வந்து அழைப்பு விடுத்தும் அதை விஜயகாந்தும், பிரேமலதாவும் உதாசீனம் செய்ததை திமுக மறக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க தொண்டர்கள் சோர்வடைவார்கள் என்பதற்காக, அனைத்துக் கட்சிகளில் இருந்தும் தங்களுக்கு அழைப்பு வருகிறது எனக் கூறி வருகிறதாம் தேமுதிக முகாம்!