"அம்மா.. உன்னை பார்க்க வரலாம்னு இருந்தேன்.. முடியாம போச்சே.." வாட்ஸ் ஆப்பில் பார்த்துக் கதறிய மகன்!
சேலம்: "அம்மா.. அம்மா.. உன்னை பார்க்க வரலாம்னு இருந்தேன்..ம்மா, என்னால முடியாம போச்சு.." என்று தாயின் சடலத்தை வாட்ஸ்அப் வீடியோ காலில் பார்த்து கதறி கதறி அழுதார் ராணுவ வீரர் சக்திவேல்.. அந்த கண்ணீர் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி காண்போரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
அசுர கொரோனா ஒவ்வொரு நாட்டையும், ஒவ்வொரு மாநிலத்தையும் பாடாய் படுத்தி வருகிறது.. இந்த வைரஸை தடுக்க மருத்துவர்கள் மட்டுமல்லாமல் காவல்துறையினரும், ராணுவ வீரரும், பத்திரிகையாளர்களும், தூய்மை பணியாளர்களும் தங்களை முழுமையாக இணைத்து கொண்டுள்ளனர்.
தங்களது குடும்பங்கள், குழந்தைகளையும் மறந்து கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்... தொற்று அபாயம் இவர்களுக்கும் கூட உண்டு என்றாலும், உயிரையும் துச்சமென நினைத்து மக்கள் சேவையில் இறங்கி வருகின்றனர்.. அதேபோல, சுய விருப்பு, வெறுப்புக்கும் இடமில்லாமல் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.
இந்த ஒரு மாத காலமாக இவர்கள் சந்திக்கும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் இடர்பாடுகள், சோகங்கள் அதிகம்.. "அம்மா செத்துட்டாங்கன்னு போன் வந்தது... ஆனால் என்னால் போக முடியல.. 4 மாவட்டம், 40 செக்போஸ்டை தாண்டி போகணும்.. அப்படியே போனாலும் அங்கே நிறைய பேருடன் பேச வேண்டி வரும்... தொற்று ஏற்பட சான்ஸ் இருக்கு.. அதான் என் தம்பியையே இறுதிச் சடங்கு செய்ய சொல்லிட்டேன்.. அந்த இறுதிசடங்கை வீடியோ கால் பண்ணி அழுதபடியே பார்த்து கொண்டேன்" என்று ஆந்திராவை சேர்ந்த போலீஸ்காரர் சாந்தாராமை நம்மால் மறக்க முடியாது..
அதுபோலவே தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய தாயின் இறுதிச்சடங்கிற்கு செல்ல முடியாமல் வாட்ஸ் அப் வீடியோ காலில் சடலத்தை பார்த்து கதறி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே புக்கம்பட்டி அடுத்த அழகாகவுண்டனூரைச் சேர்ந்த தம்பதி தங்கவேலு - மாது.. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்... இவர் பெயர் சக்திவேல் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்... ராஜஸ்தானில் சக்திவேல் தற்போது ராணுவ பணியில் உள்ளார்.
கடந்த சில தினங்களாக சக்திவேலின் அம்மா மாது-வுக்கு உடம்பு சரியில்லை.. சிகிச்சையில் இருந்த நிலையில் தற்போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்... தாயின் இறந்த செய்தி சக்திவேலுக்கு சொல்லப்பட்டது.. இதை கேட்டதும் சுக்குநூறாக நொறுங்கிப்போன சக்திவேல், சொந்த ஊருக்கு எப்படியாவது செல்ல வேண்டும் என்று பல வகைகளில் முயன்றார்.
ஊரடங்கு அமலில் உள்ளதால் அவரால் தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை... இதனை அடுத்து அவரது சொந்தக்காரர்கள் வாட்ஸ்-அப் வீடியோ காலில் தாயின் இறுதிச்சடங்கை சக்திவேலுக்கு காண்பித்தனர். தாயின் சடலம் கிடத்தப்பட்டிருப்பதை பார்த்ததும் சக்திவேல் "அம்மா..அம்மா.. உன்னை பார்க்க வரலாம்னு இருந்தேன்..ம்மா, என்னால முடியல" என்று கதறி அழுதது அங்கு கூடியிருந்த உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சக்திவேல் கண்ணீர் விட்டு கதறிய இந்த வீடியோ வெளியாகி காண்போரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.