கூட்டணினா விமர்சனம் வரத் தான் செய்யும்... திங்கள் கிழமை பதில் சொல்றேன்... அன்புமணி பளீச்
சேலம்: அதிமுக + பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளதற்கு விமர்சனம் எழுந்துள்ள நிலையில், வருகிற திங்கள் கிழமை அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திராவிட கட்சிகளுடன் இனி மேல் கூட்டணியை கிடையாது என சபதம் எடுத்த பாட்டாளி மக்கள் கட்சி. தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்துள்ளது.
அந்த கூட்டணியில், நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளை தவிர ஒரு ராஜ்ய சபா சீட்டும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், நடக்க உள்ள 21 தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக விமர்சனம்
திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பழம் நழுவி பாலில் விழாமல் போய் விட்டது. இதனால், ஆவேசமடைந்த ஸ்டாலின் கடும் வார்த்தைகளால் பாமகவை விமர்சித்ததார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், பாட்டாளி மக்கள் கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக தெரிகிறது.
மீம்ஸ் வைரல்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவை ஏடாகூடாமாக விமர்சித்த அன்புமணி ராமதாஸின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் போட்டும், நையாண்டி கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பாமக தொண்டர்கள் முடிந்த அளவிற்கு பதிலளித்து வருகின்றனர். ஆனால், அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை.
திங்கட்கிழமை பதில்
இந்தநிலையில், சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது, கூட்டணி விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்த அத்தனை கேள்விகளுக்கும் வருகின்ற திங்கள்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் பதில் அளிப்பேன் என்றார்.
விமர்சனங்கள் வரும்
மேலும், கூட்டணி என்றால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என்றும் கூறினார். மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது குறித்து, வருகிற திங்கள் கிழமை விரிவாக அனைத்து கேள்விகளுக்கும் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பதிலளிக்கிறேன் என்று மீண்டும் தெரிவித்தார்.