தொடர்ந்து 8வது ஆண்டாக ஜூன் 12 ம் தேதி திறக்கப்படாத மேட்டூர் அணை!
Recommended Video
சேலம்: தொடர்ந்து 8வது ஆண்டாக ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் சம்பா நெல் சாகுபடிக்காக ஜூன் 12 ம் தேதி திறக்கப்படவேண்டிய மேட்டூர் அணை தொடர்ந்து 8 வது ஆண்டாக திறக்கப் படாததால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை மூலம் 12 மாவட்டங்களில் உள்ள 16.40 லட்சம் ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு ஏற்றவகையில், மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை மொத்தம் 330 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2012 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 8 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படுவது இல்லை. பருவமழை பொய்த்துப்போவது, கர்நாடகம் தமிழகத்துக்கு உரிய பங்கு நீரை திறந்து விடாமல் இருப்பது உட்பட பல்வேறு காரணங்களால் நீர் திறக்கப்படாமல் இருக்கிறது.
குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு மொத்தம் 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதற்காக ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை,மேட்டூர் அணை திறந்து விடப்படுவது வழக்கம். காவிரி டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பொழியும் பட்சத்தில் இந்த தண்ணீர் தேவை சற்று குறையும். ஆனால் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கு முன்னதாக கடைசியாக 2011ம் ஆண்டு அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் ஜூன் 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
சென்னையில் புற்றீசலாய் லாட்ஜ்கள்..பெருகும் தற்கொலையால் அதிர்ச்சி.. கிடுக்கிப்பிடி போடுமா போலீஸ்
அதன் பின்னர் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதே இல்லை. இதனால் போதிய தண்ணீர் கிடைக்காமல் குறுவை மட்டுமின்றி சம்பா, தாளடியும் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆகவே விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
கடந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக ஜூலை 17ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் இப்போது தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் குடிக்கவே தண்ணீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
மேட்டூர் அணையின் நேற்றைய நீர் மட்டம் 45.59 அடியாகவும், நீர் இருப்பு 15.14 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் போதிய நீர் இருப்போ அல்லது போதிய நீர்வரத்தோ இல்லாததால் அணையில் இருந்து இப்போதைக்கு நீர் திறக்க வாய்ப்பே இல்லை. இதனால் நடப்பு நீர் பாசன ஆண்டில் தொடர்ந்து 8வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போகிறது. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.