ஆஹா.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி.. மேட்டூர் அணை இப்போ எப்படி இருக்கு தெரியுமா?
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 95.10 அடியாக உயர்ந்துள்ளது. கடல் போல் காட்சி அளிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபிணி அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை ஆகியவற்றுக்கு நீர் வரத்து அதிகமாகியுள்ளது.
இந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி ஆற்றில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வரை நீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது.
26 வது முறையாக 100 அடியை எட்டிய பவானி சாகர் அணை ...விவசாயிகள் மகிழ்ச்சி!!
பிலிகுண்டுலு
இந்த நீர் தமிழக- கர்நாடக எல்லையில் பிலிகுண்டுலுவை கடந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நீர்மட்டமும் 75 அடியாக இருந்தது.
1.30 லட்சம் கனஅடி
இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியானது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு அதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர் வரத்து அதிகரிப்பால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது.
11 அடி உயர்வு
நேற்று காலை 86 அடியாக இருந்த நீர் மட்டம் ஒரே நாளில் 11 அடியாக உயர்ந்துவிட்டது. அதாவது இன்று காலை 95.10 அடியாக உள்ளது. இன்றோ நாளையோ மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடியிலிருந்து 80 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கு கடந்த 1ஆம் தேதி நீர் வரத்து இன்றி 30 அடியாக காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழையின் காரணமாக தேக்கடி முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருவதன் காரணமாகவும் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் ஆனது 136.75 அடியை எட்டியது.
Recommended Video
10 நாட்களில் வைகை அணை
இதனை அடுத்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 2130 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதன் விளைவாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர் வர துவங்கியதையடுத்து தற்போது அணையின் நீர்மட்டமானது 40.98 அடியாக உள்ளது. வைகை அணைக்கு வினாடிக்கு 1946 கன அடி வீதம் நீர் வரத்து வருகிறது.72 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றபட்டு வருகிறது அதுமட்டுமின்றி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதும் அணைக்கு நீர்வரத்திற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் வைகை அணையின் நீர்மட்டம் சுமார் 11 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதையடுத்து ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.