விறுவிறுவென உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 111-ஆக உயர்வு.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் இங்கு அணையின் நீர் மட்டம் 111 ஆக உயர்ந்துள்ளது. வரலாற்றில் 65-ஆவது முறையாக 100 அடியை தாண்டியுள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தென்னிந்தியாவை வாட்டி வதைத்து வருகிறது. கர்நாடகம், கேரளம், தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கே ஆர் எஸ், கபிணி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
2 லட்சத்துக்கும் அதிகமான தண்ணீர்
கனமழை தொடர்வதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் பிலிகுண்டுலு வழியாக தமிழகத்தை வந்தடைகிறது. ஒகேனக்கலுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
100 அடி
இதனால் அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2.10 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் நேற்றைய தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. இந்த உயர்வானது 65-ஆவது முறையாகும்.
50 ஆயிரம் கனஅடி
இந்த நிலையில் நேற்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையை பாசன வசதிக்காக திறந்துவிட்டார். அணைக்கு வேகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீரானது 50 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
80 டிஎம்சி
இதனால் நீர் மட்டம் 111.16 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 80.08 டிஎம்சியாக உள்ளது. கர்நாடகத்திடம் தண்ணீர் திறந்துவிட தமிழகம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது ஏராளமான நீர் வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே மழை தொடர்ந்தால் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.