50 அடியை எட்டியது மேட்டூர் அணை.. காவிரியில் மேலும் 5 நாள்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு
Recommended Video
சேலம்: கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காரணமாக மேட்டூர் அணை நீர் மட்டம் 2 மாதங்களுக்கு பின் 50 அடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் டெல்லியில் அமைந்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பெங்களூருவில் இயங்குகிறது.
நேற்று பெங்களூருவில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா , கேரளா மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 30 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படாமல் பாக்கி உள்ளதாகவும் ஆகஸ்ட் மாதத்துக்கும் சேர்த்து 45.93 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதேநேரம் கர்நாடகா சார்பில் அதிகாரிகள், அங்கு மழை குறைந்துவிட்டதாகவும், அணைகளின் நீர் இருப்பு குறைவாக இருப்பதாகவும் அணைகளின் நீர் இருப்பு விவரங்களை தெரிவித்தனர். இதையடுத்து தமிழகத்துக்காக காவிரியில் அடுத்த 5 நாள்களுக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன் குமார் உத்தரவிட்டார்.
இதனிடையே கர்நாடகா திறந்துவிட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் அதிக அளவு வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியை கடந்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ள அளவு 120 அடியாகும். இன்னும் 70 அடி தண்ணீர் நிரம்ப வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பெரிய அளவில் பெய்யாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.