விறுவிறுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. 92.55 அடியை தாண்டியது!
Recommended Video
சேலம்: அணைகளை தாண்டி காட்டாற்று வெள்ளமாக காவிரித்தாய் ஓடி வந்த காரணத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் 92.55 அடியை எட்டியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக . கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை தற்போது நிரம்பி வழிகின்றன.
இதனால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு பிறகு 2.80 லட்சம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கலை தாண்டி பாய்ந்து சென்றது. இந்த தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வந்து கொண்டே இருக்கிறது.
தற்போது மேட்டூர் அணைக்கு 2.20 லட்சம் கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 92.55 அடியை எட்டியுள்ளது.
இப்படியே நீடித்தால் மேட்டூர் அணை இன்னும் சில நாள்களில் நிரம்பிவிடும். இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு நாளை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.