மேட்டூர் அணை நாளை திறக்கப்படாது... டெல்டா விவசாயிகள் கவலை
மேட்டூர்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படாது என்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 60 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க சாத்தியக்கூறுகள் ஏற்படும்.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொங்கி உள்ளது. அதே சமயம், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மேட்டுர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசன பகுதிகளில் குறுவை சாகுபடி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், இந்த ஆண்டு அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் நாளை (12-ந் தேதி) மேட்டூர் அணை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டும் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு காலதாமதம் ஆகும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 919 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 930 கனஅடியாக அதிகரித்தது.
இன்று காலை இதுகுறைந்து 861 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு சற்று கூடுதலாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 45.63 அடியிலிருந்து 45.59 அடியாக குறைந்து உள்ளது.
இதற்கிடையே, ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்பவர்கள் குறுவை சாகுபடியில் ஈடுபடலாம் என்று அமைச்சர் காமராஜர் கூறியுள்ளார். மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதியோ அல்லது கால தாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்தாண்டு, ஒரு மாத காலம் தாமதமாக ஜூலை 19-ந் தேதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கர்நாடகத்தில் முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.