24 மணி நேரத்தில் 18 அடி உயர்ந்தது மேட்டூர் அணை.. காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு..
Recommended Video
சேலம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக . கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை தற்போது நிரம்பி வழிகின்றன.
இதனால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை நோக்கி சுமார் 3 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 85 அடியை தாண்டியுள்ளது.
அணைக்கு இன்று நீர்வரத்து 1,65,000 கன அடியிலிருந்து 2,10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் 85.43 அடியாக உயர்ந்தது மேட்டூர் அணையின் நீர்மட்டம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இப்படியே நீடித்தால் மேட்டூர் அணை இன்னும் சில நாள்களில் நிரம்பிவிடும். இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு நாளை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக இன்று மாலை விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.