தமிழகத்தின் தாகத்தை தீர்க்க மேட்டூர் அணைக்கு ஓடோடி வந்தாள் காவிரி.. அணையின் நீர்மட்டம் 75 அடி உயர்வு
சேலம்: காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 75 அடியாக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை காரணமாக, தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. அதேபோல் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும் காவிரியில் நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.
கர்நாடகத்தில் சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கர்வாரில் நிலச்சரிவு ஏற்பட்டு கொங்கன் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு 3 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கபிணி மற்றும் அதன் தடுப்பு அணைகளிலிருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1.75 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1.15 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை முதல் 71 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 75 அடியாக உயர்ந்துள்ளது.
அதாவது கடந்த 24 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 15 அடியை தாண்டியது. நாளையும் கர்நாடகத்துக்கு மழை பெய்யும் என்பதால் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.