50க்கும் மேற்பட்ட குக்கிராம மக்களுக்கு இலவச அரிசி, காய்கறி.. சேலம் மேற்கு மாவட்ட பாஜக சபாஷ்
சேலம்: ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுகா பகுதிகளில் பாஜக சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் 50க்கும் மேற்பட்ட குக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட கொரோனா நிவாரண பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20ஆயிரத்தை தாண்டிய நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 640ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுக்கும் நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் 144 ஊரடங்கு உத்தரவை மே மாதம் 3ம் தேதி வரை நீடித்துள்ளது. இதைதொடர்ந்து பொதுமக்கள் வேலையின்றி சுமார் ஒரு மாதமாக வீட்டிலேயே முடங்கி இருப்பதால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதைதொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோர் ஏழை எளியோருக்கு உணவு உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்க பாஜகவினருக்கு ஆணையிட்டனர். இந்த ஆணைப்படி சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரங்களில் பாஜக சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் தினந்தோறும் நிவாரண பொருட்கள் கொண்ட தொகுப்புகளை வழங்குகிறார்கள்.
50க்கும் மேற்பட்ட குக்கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்புகளை வழங்கி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக இன்று ஓமலூர் அருகேயுள்ள ஆர்சி செட்டிப்பட்டி காலனி பகுதியில் அரிசி, பருப்பு, காய்கறிகள் கொண்ட தொகுப்புகளை சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ரவி மற்றும் விஜயகுமார் கலந்துகொண்டு வழங்கினார்கள்.
இதைதொடர்ந்து கொரோனா நோய் வராமல் தடுக்கும் நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது. பொதுமக்களும், பாஜகவினருக்கு நன்றி தெரிவித்து சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை பெற்று சென்றனர்.