அமைச்சர்கள் பட்டியலுடன் வந்து சேலம் அப்பா பைத்தியம் கோவிலில் வழிபட்ட புதுச்சேரி ரங்கசாமி
புதுச்சேரி முதல்வராக பதவியேற்கப் போகும் என்ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமி இன்று அப்பா பைத்தியம் கோவிலுக்கு வந்து அமைச்சர்கள் பட்டியலை வைத்து வழிபட்டுள்ளார்.
சேலம்: புதுச்சேரி முதல்வராக பதவியேற்கப்போகும் என்ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமி இன்று சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் கோவிலுக்கு வந்து வழிபட்டார். சட்டசபைத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் ஜாதகங்களையும் அப்பா பைத்தியம் சித்தரின் பாதங்களில் வைத்து உத்தரவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு காலத்தில் முருக பக்தராக இருந்த என். ரங்கசாமி கடந்த 90ஆம் ஆண்டு அப்பா பைத்தியம் சாமிகளைச் சந்தித்தார். அதன்பின் அவரது தீவிர பக்தராக மாறினார். முக்கிய முடிவுகளுக்கு முன் சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு முக்கிய முடிவு எடுப்பார். வீட்டில் உள்ள அவரது படத்தை கும்பிடாமல் எங்கேயும் புறப்பட மாட்டார்.
புதுச்சேரி முதல்வராவதற்கு அப்பா பைத்தியம் சாமிகள்தான் காரணம் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முன்பாக சேலம் வந்த என். ரங்கசாமி யாருடன் கூட்டணி அமைப்பது என்று குறி கேட்டு விட்டு சென்றார். வேட்பாளர் பட்டியலையும் அப்பா பைத்தியம் சிலை முன்பாக வைத்து வணங்கினார்.
திரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு?
அமைச்சரவையில் யார் யார்
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இன்று சேலத்தில் உள்ள தனது குருவான அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். அப்போது சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், புதிய அமைச்சரவை பட்டியலையும் சுவாமி சிலை முன்பாக வைத்து சிறப்பு பூஜை நடத்தினார்.
புதுச்சேரிக்கு புறப்பட்ட ரங்கசாமி
கோவிலுக்கு வந்த ரங்கசாமிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மற்றும் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியினருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்ட ரங்கசாமி, பின்னர் புதுச்சேரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.
அருள்வாக்கு
கடந்த 90ஆம் ஆண்டு முதல் முறையாக தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு ரங்கசாமி தோல்வி அடைந்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த அப்பா பைத்தியம் சாமியார் புதுச்சேரி வந்திருந்தார். அவரை முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆசி பெறுவர். அப்போது ரங்கசாமியும் சந்தித்தார். அவரைப் பார்த்த சாமியார், ஓராண்டில் அமைச்சராவாய் என்றார்.
91ஆம் ஆண்டு திமுக-ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடைபெற்றது. மீண்டும் தட்டாச்சாவடி தொகுதியில் போட்டியிட்ட ரங்கசாமி, வெற்றிபெற்று கூட்டுறவு அமைச்சரானார்.
சேலம் சமாதியில் வழிபாடு
அன்று முதல் அப்பா பைத்தியம் சாமி பக்தரானார். கடந்த 2000ஆம் ஆண்டு சாமிகள் ஜீவசமாதி அடைந்தார். அதன் பின்னர் சேலம் சூரமங்கலத்திலுள்ள அவரது சமாதிக்கு செல்ல தொடங்கினார். சிலை முன்பு அமர்ந்து உத்தரவு பெற்ற பிறகே அனைத்து காரியத்தையும் செய்வார். சேலம் அடிக்கடி செல்ல முடியாததால் புதுச்சேரி வீமக்கவுண்டன்பாளையத்தில் கோயில் கட்டியுள்ளார்.
வெற்றிக்காக வழிபாடு
அவரது அலுவலகம், வீடு, கார் என அனைத்து இடங்களிலும் அவரது படம் வைத்திருக்கும் அளவுக்கு தீவிர பக்தராக மாறி விட்டார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சாமி பார்த்துக்குவார் என்பதே இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அதன் காரணமாகவே கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பித்தது முதல் அமைச்சரவை பட்டியல் வரை அப்போது வைத்து வணங்கி சென்றுள்ளார்.