பெற்ற குழந்தையை பார்ப்பதை விட நாட்டுக்கு விளையாடியதே பெருமை.. கிரிக்கெட் வீரர் நடராஜன்
சேலம்: பிறந்த குழந்தையை பார்ப்பதை விட நாட்டுக்காக விளையாடியதே மகிழ்ச்சி என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஆஸ்திரேலியா தொடரை முடித்துக் கொண்டு கடந்த வியாழக்கிழமை சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு வருகை தந்தார் நடராஜன். அவருக்கு செண்டை மேளம் வைத்து கிராம மக்களால் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சொந்த மண்ணில் சேலத்தில் இன்று நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது சர்வதேச போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தது.
கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். முதல் ஒரு நாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு மாதிரி இருந்தது. சக வீரர்கள் மற்றும் கோச்சர்கள் நல்ல ஆதரவு அளித்தனர். அதனால்தான் சாதிக்க முடியாது. இதையே பெரிய சாதனையாக நினைக்கிறேன்.
விளையாட்டு
வெற்றி கோப்பையை கையில் வாங்கும் போது கண் கலங்கி விட்டேன். கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம். எந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் கட்டாயம் விளையாடுவேன். நான் மட்டுமின்றி அணியில் உள்ள அனைவரும் ஒன்றாக இனைந்து விளையாடியதால்தான் வெற்றி கைவசமானது.
பெருமை
நான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அடுத்தடுத்து 3 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. பிறந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை விட நாட்டுக்காக விளையாடியதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
சாதிக்க முடியும்
கடின உழைப்பு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்; இதற்கு நானே உதாரணம். ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார். கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும் என்பதுதான் நான் மற்றவர்களுக்கு சொல்ல விரும்புவது. இந்தியாவுக்காக மேலும் மேலும் பல போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது இலக்காக உள்ளது என்றார்.