“ஜாதி..” சேலம் கோயிலில் அத்துமீறிய திமுக நிர்வாகி.. தானாகமுன்வந்து விசாரணை தொடங்கிய எஸ்.சி. ஆணையம்
சேலத்தில் கோவிலுக்கு சென்ற தலித் இளைஞரை திமுக நிர்வாகி மிரட்டிய வழக்கை பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
சேலம்: அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞரை அபாசமான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்த வழக்கை பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
சேலம் மாவட்டம் திருமலைகிரியில் அறநிலையத்துறைக்கு சொந்தமாக ள்ள மாரியம்மன் கோவில் அமைந்து இருக்கிறது. இங்கு பட்டியல் சமூகத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்காமல் பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள உயர் சாதியினர் தடை விதித்து உள்ளனர்.
அந்த தடையை மீறி பிரவீன் குமார் என்ற பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் அங்கு நுழைந்ததற்காக தி.மு.கவை சேர்ந்த டி.மாணிக்கம் என்ற ஒன்றிய செயலாளர் அவரை தகாத வார்த்தைகளால் பேசி நெஞ்சை பிடித்து தள்ளி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
தலைக்கேறிய ஜாதி வெறி.. “கோயிலுக்கு வந்தால் கொல்வேன்”.. தலித் இளைஞரை தாக்கிய திமுக நிர்வாகி கைது
திமுகவில் இருந்து சஸ்பெண்ட்
அத்துடன் அவரது பெற்றோரையும், அவர் சார்ந்த சமூகத்தையும் தகாத வார்த்தைகளால் மாணிக்கம் பேசினார். இதனை தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதாக கூறி அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார் திமுக பொதுச் செயலாளார் துரைமுருகன்.
போலீசில் புகார்
இதனை அடுத்து இரும்பாலை காவல் நிலையத்தில் இளைஞர் பிரவீன் குமார் புகார் அளித்தார். அந்த மனுவில், "நான் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். நான் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எங்கள் ஊரில் அரசுக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அதற்கு ஊர் மக்கள் சார்பில் திருவிழாவிற்கான ஏற்பாடு நடந்து வந்தது.
நீ ஏன் கோவிலுக்குள் சென்றாய்?
இந்நிலையில் கடந்த 26/01/2023 அன்று இரவு 8:30 மணியளவில் அந்த மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வெளியே வந்த போது அங்கே அமர்ந்திருந்த வெங்கடாசலம் மற்றும் கூலைகவுண்டர் என்று அழைக்கப்படும் இருவரும் என்னை பார்த்து நீ ஏன்டா கோவிலுக்குள் சென்றாய் உங்களை எல்லாம் உள்ளே வரக்கூடாது என்றும் கூறி அடிக்க வந்தனர்.
திமுக நிர்வாகி மாணிக்கம்
மேலும் உன்னை காலையில் பார்த்துக் கொள்கிறோம் என்று மிரட்டினார்கள். அதன்பின் 27/01/2023 அன்று காலை சுமார் 8:30 மணியளவில் பெரிய மாரியம்மன் கோவில் வாசாலுக்கு திமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் என்னை அழைத்து வரச் சொன்னதாக கூறி எங்கள் ஊரை சேர்ந்த சிலர் அழைத்துச் சென்றனர்.
கொச்சை வார்த்தைகளில் திட்டு
பெரிய மாரியம்மன் கோவில் வாசலில் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வெங்கடாசலம், கூலைகவுண்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். என்னை பார்த்த உடன் அங்கே இருந்த திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி உன்னை யாருடா கோவிலுக்குள் போகச் சொன்னது.
கீழ் சாதி பையன்
மேளம் அடிக்கும் நாய்கள் நீங்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது என்று திட்டி என் நெஞ்சில் தாக்கினார். அப்போது வெங்கடாசலம் என்பவர் இந்த கீழ் சாதி பையன்கிட்ட நானே வரக்கூடாது என்று கூறியும் மீண்டும் திமிராக கோவிலுக்குள் வருகிறான். இவனை சும்மா விடக்கூடாது என்று மிரட்டினார்.
கொலை மிரட்டல்
அதன்பின் என் பெற்றோர்களும் நானும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சினோம். அதன் பின் வெங்கடாசலம், மாணிக்கம் உள்ளிட்டவர்கள் என்னை இனி கோவிலுக்குள் நுழைந்தால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினார்கள். அதன்பின் அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்து வந்தேன்.
போலீசாரிடம் கோரிக்கை
சாதியை காரணமாக வைத்து அரசுக்கு சொந்தமான கோவிலில் என்னையும் என் சாதியை சமூகத்தையும் நுழையக்கூடாது என்று மிரட்டியும் கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வெங்கடாசலம், கூலைகவுண்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்
இதனை அடுத்து திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம் மீது சேலம் இரும்பாலை காவல்நிலைய போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.