கொரோனா இறப்பு விகிதம் 2% மட்டுமே.. தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.. விஜயபாஸ்கர் அறிவிப்பு
சேலம்: கொரோனா வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனையில் இன்று இரவு அவர் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போர் (mortality rate of coronavirus) என்பது வெறும் 2% மட்டும்தான்.
அதுவும்கூட, இதயநோய் பாதிப்பு, ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற நோய்கள் இருப்பவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த வயது முதிர்ந்தோர் ஆகியோருக்குத் தான் இறப்புக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, மற்றவர்கள் அச்சப்படத் தேவை இல்லை.
கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான குறும்படம், விரைவில் வெளியிடப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தேவைப்படும் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு கிடையாது. கொரோனா வைரஸ் தொடர்பான ரத்தப்பரிசோதனை இந்தியாவிலேயே புனே நகரத்தில் மட்டும் தான் இருந்தது. ஆனால் தமிழகத்தில் நாம் ஏற்கனவே அதுபோன்ற ஒரு ஆய்வகத்தை அமைத்து விட்டோம்.
இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.