அரிசி என்ன விலை விற்குது.. கிடுகிடுவென உயர்த்ததால் மக்கள் அதிர்ச்சி
சேலம்: தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நெல் விளைச்சல் சரிந்துள்ளதால் தமிழகத்துக்கு அரிசி வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அரிசி விலை ஒரே மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 100 கிலோ மூட்டைக்கு ரூ.400 வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நெல் விளைச்சல் அதிகமாக உள்ளது. இங்கு இருந்துதான் தமிழகத்தின் அரிசி தேவை ஓரளவு பூர்த்தியாகிறது. மீதமுள்ள அரிசி தேவையை கர்நாடகா மற்றும் ஆந்திராவில் விளையும் நெல் மூலம் தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதன் காரணமாக நெல் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு அரிசி வரத்து கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் இருந்து வரும் அரிசி வரத்து 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சேலம் அரிசி மொத்த வியாபாரிகள் கூறுகையில் "சேலம் செவ்வாய் பேட்டை லீ பஜாருக்கு தினசரி 300 முதல் 400 டன் அரிசி வரும். இந்த ஆண்டு அரசி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் இருந்து 50 முதல் 60 டன் என்ற அளவே வருகிறது. கர்நாடகாவில் இருந்து 150 முதல் 200 டன் அரசியே வருகிறது. கடந்த மாதத்தைத காட்டிலும் இந்த மாதம் 30 சதவீதம் அரிசி வரத்து சரிந்துள்ளது. இதன் காரணமாக அரிசி விலை 100 கிலோ மூட்டை ரூ.400 வரை உயர்ந்துள்ளது.
ஜனவரி மாதம் ரூ.5200க்கு விற்ற வெள்ளை பொன்னி(100 கிலோ) ரூ.5600 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் ரூ.3600க்கு விற்ற பிபிடி ரகம் ரூ.4000க்கும், டீலக்ஸ் பொன்னி ரூ.3400 இல் இருந்து ரூ.3800க்கும், 2600க்கு விற்ற 045 ரக அரிசி 2800 ரூபாயில் இருந்து 3400 ஆகவும் உயர்ந்துள்ளது" என்று தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.